1927ஆம் ஆண்டு சிறுவன் ஒருவன் சாலை ஒன்றைக்
கடந்து கொண்டிருக்கையில், மிக விரைவாக வந்து
கொண்டிருந்த குதிரை வண்டி ஒன்று, அவனை முட்டி
மோதித்தள்ள இருந்தது. ஆனால் மயிரிழையில் அவன்
அந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொண்டான்.
வீட்டிற்குத் திரும்பிய அச்சிறுவனின் மனதில்
தான் தப்பி வந்த ஆபத்தே
நிழலாடிக்கொண்டிருந்தது. நடந்து வரும்
பயணிகளுக்குக் குதிரை வண்டிகளால்
(அக்காலத்தில் மோட்டார் வண்டிகள் போன்ற
தானியங்கிகள் இல்லை) ஏற்படும் இத்தகைய
ஆபத்துகளை எச்சரிக்கை செய்யும் கருவி ஒன்று
இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என
நினைத்தான். சிறிய சுத்தியல் ஒன்றை எடுத்து
அதனைச் சுருள் கம்பி (spring) ஒன்றுடன்
இணைத்தான் அச்சிறுவன். பின்னர் அந்த அமைப்பை
இரும்புப் பெட்டி ஒன்றில் பொருத்தி, தன்
காலால் அவ்வமைப்பின் விசையிழுப்பை(trigger)
அழுத்தினான். உடனே கணீரென்ற ஒலி உண்டாயிற்று.
வால்ட்டர் ஹண்ட் என்னும் பெயர் கொண்ட
அச்சிறுவன்தான் குதிரை வண்டியில்
பொருத்தக்கூடிய மேற்கூறிய அமைப்பிலான முதல்
எச்சரிக்கை மணியைக் கண்டு பிடித்தவன்.
வண்டியில் குதிரையின் கடிவாளத்தை வண்டியோட்டி
தன் இரு கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டி
இருந்ததால், தன் கால்களைக் கொண்டு எச்சரிக்கை
மணியை அவன் இயக்கும் வகையில் வால்ட்டர் ஹண்ட்
அம்மணியை வடிவமைத்தான். மிக விரைவில் இந்த
எச்சரிக்கை மணி மக்களிடம் பெரும் வரவேற்பைப்
பெற்றதுடன், மணியின் அமைப்பில் பல்வேறு
முன்னேற்றங்களும் ஏற்பட்டன.
இந்தக் கண்டுபிடிப்பினால் வால்ட்டர் ஹண்ட்
பொருளாதார ரீதியாக முன்னேற முடியவில்லை;
கடன்தான் அதிகமாயிற்று. ஒருவனிடம் 15 டாலர்
கடன்பட்டிருந்த வால்ட்டர் ஹண்டை கடன்காரன்
பணத்தைத் திருப்பித் தருமாறு நச்சரித்துக்
கொண்டிருந்தான். மனமுடைந்து போன வால்ட்டர்
தனது தொழில்பட்டறையில் உட்கார்ந்து கையில்
கிடைத்த செப்புக் கம்பி ஒன்றை இப்படியும்,
அப்படியுமாக முறுக்கிக் கொண்டிருந்தபோது
வேறொரு கண்டுபிடிப்பு வெளியாயிற்று. ஆம்,
பின்னாளில் பாதுகாப்புக் குண்டூசி (safety
pin) என அழைக்கப்பட்ட பயனுள்ள பொருள் ஒன்று
கிடைத்தது. இக்கண்டுபிடிப்பை உற்பத்தியாளர்
ஒருவருக்கு 400 டாலர்க்கு விற்ற வால்ட்டர்
ஹண்டால் தன் கடனை அடைக்கவும், மேலும்
முன்னேறவும் முடிந்தது. ஊற்றுப் பேனாவைக்
(fountain pen) கண்டுபிடித்ததும் வால்ட்டர்
ஹண்ட்தான். அதற்கு முன்னர் மயிலிறைகையும் பேனா
முள்ளையும் மையில் தோய்த்துத்தான் மக்கள்
எழுதி வந்தனர்.