2007-ம் ஆண்டு உலகையே கலங்கடித்த ஏவியன்
ஃப்ளூ என்ற பறவைக் காய்ச்சலின் பயமுறுத்தல்
அனைவரும் அறிந்த ஒன்றுதான்! 2003-ம் ஆண்டில்
இருந்து இன்றுவரையில் உலகம் முழுவதும் 336
பேரிடம் பரவிய இந்த நோயால் 207 பேர்
பலியாகியுள்ளனர். மனிதர்களுக்கிடையில் இந்த
நோய் பெரிதாகப் பரவவில்லை என்பது நமது
அதிர்ஷ்டம்தான்.
ஆனால் சுகாதார நிபுணர்கள் இந்த வைரஸ்
தொற்று நோயாக பரவிவிடுமோ என்று பயந்தனர்.
அப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற
முனைப்பில் அமெரிக்காவில் இருக்கும் ஃபுட்
அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன்(Food and Drug
Administration, USA) இந்தப் பறவைக்
காய்ச்சலுக்கு எதிரான முதல் தடுப்பூசிக்கு
அனுமதியையும், அங்கீகாரத்தையும்
வழங்கியுள்ளது.
இன்ட்ராமஸ்குலர் ஷாட் மூலமாக இந்தத்
தடுப்பூசி நமது உடலில் இரண்டு முறைகள்
செலுத்தப்படவேண்டுமாம். ஆனாலும் இந்தத்
தடுப்பூசி இன்னமும் மருத்துவச் சந்தையில்
விற்பனைக்கு வரவில்லை. அமெரிக்க அரசு இந்த
மருந்தை அதிகளவில் வாங்கி தனது கையிருப்பில்
வைத்துள்ளது. வருங்காலத்தில் இந்த நோய்
பெரியளவில் பரவுமானால் அப்போது உடனடியாக இந்த
மருந்துகள் பாதிக்கப்பட்டோருக்குத்
தரப்படுமாம்!
உடல் பருமன் அதிகமா? கவலை வேண்டாம்; அல்லி
சாப்பிடுங்கள்!
பெரிய பருமனான உடல் உடையவரா நீங்கள்? அந்த
எக்ஸ்ட்ரா சதையை எப்படி அகற்றுவது என்று மண்டை
குடைச்சலுடன் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்!
இதோ வந்து விட்டது Alli -அல்லி! அமெரிக்காவின்
ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் (Food and
Drug Administration, USA) முதன்முதலாக
அங்கீகாரம் வழங்கியிருக்கும் எடை குறைக்க
உதவும் மருந்து இதுவேயாகும்!
இந்த அல்லியைச் சாப்பிட்டால் உடலில் உணவு
மூலமாகச் சேரும் கொழுப்பில் 30 சதவிகிதம்
உறிஞ்சப்பட்டுவிடும். இந்த அல்லி மருந்தைத்
தயாரித்த கம்பெனி க்ளாக்ஸோ ஸ்மித்க்ளைன். இந்த
மருந்து ஒரு மாஜிக் புல்லட் இல்லை. இந்த
மருந்தை உட்கொண்டுவிட்டு கொழுப்புச்
சத்துக்கள் மிகுந்த உணவுகளை ஒரு
பிடிபிடிக்கலாம் என்று எண்ணிவிட வேண்டாம்.
இந்த மருந்தை பயன்படுத்தும்போது சாப்பாட்டில்
கொழுப்பு குறைந்த உணவைத்தான் பயனாளர்கள்
சாப்பிடவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறது
இந்த மருந்து நிறுவனம். அத்தோடு அதிகமாக
உடற்பயிற்சியும் தேவை என்றும்
அறிவுறுத்துகிறது!
இப்படி குறைந்த கொழுப்புள்ள உணவைச்
சாப்பிடுவதால் அல்லி மருந்தினை
உட்கொள்ளும்போது வாயு, டயரியா போன்ற
எந்தவிதமான பக்கவிளைவுகளும் இதனால் ஏற்படாது
என்று இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனம்
தெரிவித்துள்ளது.