|
ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள்
பொதுவாக அதிக குழந்தைகளைப் பெற்ற தாயை
மக்களைப் பெற்ற மகராசி என்று சொல்வார்கள்.
அதுபோல அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8
குழந்தைகளை ஒரு மகராசி பெற்றெடுத்துள்ளார்.
மருத்துவ உலகில் இது ஒரு மிகப்பெரிய
சாதனையாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டில்
ஹூஸ்டன் நகரில், ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள்
பிறந்தன. ஆனால் ஒரு வாரத்தில் ஒரு குழந்தை
இறந்தது. மற்ற 7 குழந்தைகளும் அண்மையில்
10ஆவது பிறந்த நாளைக் கொண்டாடின.
தற்போது, அமெரிக்காவின் தெற்கு லாஸ்ஏஞ்சல்ஸ்
பகுதியைச் சேர்ந்த பெல்ஃபிளவர் நகரில், ஒரு
பெண்ணுக்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன.
இங்குள்ள கெய்சர் மருத்துவமனையில், கடந்த 7
வாரத்துக்கு முன் 23 வார கர்ப்பிணி ஒருவர்
பரிசோதனைக்கு வந்தார். அவருக்கு ஸ்கேன்
எடுத்துப் பார்த்த டாக்டர்கள், அப்பெண்ணின்
வயிற்றில் 7 குழந்தைகள் இருப்பதைக் கண்டு
அதிர்ச்சியடைந்தனர்.
பிரசவம் முடியும் வரை மருத்துவமனையிலேயே
தங்கியிருக்குமாறு டாக்டர்கள் உத்தரவிட்டனர்.
கர்ப்பக்காலம் முடிந்ததையடுத்து. அவருக்கு
அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க
டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அந்தப் பெண்ணுக்கு கடந்த திங்கட்கிழமை அன்று
அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 6 குழந்தைகளை
வெளியில் எடுத்த டாக்டர்கள், வயிற்றில் மேலும்
2 குழந்தைகள் இருப்பதைப் பார்த்து
அதிர்ச்சியடைந்தனர்.
முடிவில் 8 குழந்தைகளையும் வெற்றிகரமாக
டாக்டர்கள் வெளியில் எடுத்தனர். இதில் 6 ஆண்,
2 பெண் குழந்தைகள். 8 குழந்தைகளும் 69 கிராம்
முதல் 1.47 கிலோ வரை இருந்தன.
இதில் 3 குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில்
பிரச்னை இருந்ததால், இன்குபேட்டரில்
வைக்கப்பட்டுள்ளன. எட்டு குழந்தைகளும், தாயும்
நல்ல நிலையில் இருப்பதாகவும் கவலைப்படத்
தேவையில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி மருத்துவமனையின் தலைமை டாக்டர் கரன்
மேப்பீஸ் கூறுகையில், 7 குழந்தைகள்தான் உள்ளது
என்று நினைத்தோம். சம்பந்தப்பட்ட பெண்ணின்
வயிற்றில் 8ஆவதாக ஒரு குழந்தையிருப்பதை
அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், அந்தக்
குழந்தையும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம்
எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணும், 8 குழந்தைகளும் நலமுடன்
உள்ளதாகவும் அவர் கூறினார்.
கெய்சர் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 8
குழந்தைகள் பிறந்திருப்பது இதுவே முதல்முறை
என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறைந்த எடை காரணமாக இந்த குழந்தைகளுக்கு
முதல் 7 நாட்கள் மட்டுமே மிகவும் அபாயமான
நாட்களாகும். அதை தாண்டிவிட்டால் எந்த
பிரச்னையும் இருக்காது. எனினும் 8
குழந்தைகளும் இன்குபேட்டரில் 8 வாரங்கள்
இருக்க வேண்டும்.
10
வாரத்துக்கு பின்தான் மருத்துவமனையிலிருந்து
தாயையும் குழந்தைகளையும் வீட்டுக்கு
அனுப்புவோம் என்றும் டாக்டர் கரன்
தெரிவித்தார்.
|