இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில்
பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையினராக
வாழ்ந்து வரும் தமிழர், இலங்கைத் தமிழர்
அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் எனப்படுவர்.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி,
தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு
தமிழ் நாட்டிலிருந்து கொணர்ந்து
குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவழித்
தமிழரிடம் இருந்து வேறுபடுத்தி
காட்டும்பொருட்டே வம்சாவழித் தமிழர் எனும்
தொடர் பயன்படுத்தப்பட்டது.
பொருளடக்கம்
• 1 வரலாறு
• 2 மக்கள் பரம்பல்
• 3 சமூகப் பண்புகள்
• 4 பண்பாடு
• 5 பிரதேச உட்பிரிவுகள்
• 6 இலங்கைத் தமிழர் நோக்கிய விமர்சனங்கள்
• 7 இவற்றையும் பார்க்கவும்
• 8 மேற்கோள்கள்
வரலாறு
இலங்கைத் தமிழர்களுடைய தோற்றம் பற்றித்
தெளிவான சான்றுகள் இல்லை. இலங்கையின் வரலாறு
கூறும் பண்டைய நூலான மகாவம்சம் இலங்கை
வம்சாவழித் தமிழருடைய தோற்றம் பற்றி அறிந்து
கொள்வதற்கான ஆதாரங்கள் எதையும் தரவில்லை.
அடிப்படையில் மகாவம்சம் பௌத்த மதத்தையும்,
சிங்களவர் பற்றியுமே கவனம் செலுத்தியுள்ளது.
அதன் மேற்படி குறிக்கோளுடன் சம்பந்தப்பட்ட
அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்
தொடர்பில் மட்டுமே தமிழர்கள் பற்றிய
குறிப்புகள் காணப்படுகின்றன. சிங்கள இனத்தின்
ஆதிபிதாவாக மகாவம்சம் குறிப்பிடும் விசயன்
காலத்திற்கூட திருமணத் தொடர்புகள் காரணமாகப்
பாண்டிநாட்டிலிருந்து பெருமளவில் தமிழர்கள்
இலங்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.
எனினும் இவர்கள் சிங்கள இனத் தோற்றத்தின் ஒரு
பகுதியாக விளங்கியிருப்பார்கள் என்று கருதுவதே
பொருத்தம். எனினும் இத்தகைய
குறிப்புக்களிருந்து, இலங்கை பற்றித்
தமிழ்நாட்டினருக்கு நல்ல பரிச்சயம்
இருந்ததென்பதுவும், இலங்கைத் தீவுக்கும்
தமிழ்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகள் மக்கள்
இலகுவாகப் போக்குவரத்துச் செய்யக் கூடிய
அளவில் இருந்தது என்பதையும்
தெளிவாக்குகின்றது.
இது மட்டுமன்றிக் கிறிஸ்துவுக்கு முற்பட்ட
காலங்களிலிருந்தே அனுராதபுரத்தைக் கைப்பற்றிப்
பல தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவம்சம் தரும்
குறிப்புக்களிருந்து அறியவருகின்றது. பண்டைக்
காலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கிய
மாதோட்டத்தில் தமிழ்நாட்டு வணிகர்கள் பெரும்
செல்வாக்குச் செலுத்தியிருக்கக் கூடும்
என்பதும் பல ஆராய்ச்சியாளர் கருத்து. கி.மு
ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தாம்
நூற்றாண்டுவரை இலங்கயின் தலைநகரமாயிருந்த
அநுரதபுரத்தில் மிக முற்பட்டகாலங்களிலேயே
தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான
ஆதாரங்கள் உண்டு.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே
இன்றைய யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில்
தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடுமென்பது
யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய செ.இராசநாயக
முதலியார் அவர்களுடைய கருத்து. எனினும்,
இதற்கான ஆதாரங்கள் போதிய அளவில்
கிடைக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
இலங்கையில் தமிழர் பரவலாக வாழ்ந்து
வந்தபோதிலும், அனுராதபுர, பொலநறுவை ஆட்சிகளின்
வீழ்ச்சியுடன் சிங்களவர் அதிகாரம்
தெற்குநோக்கி நகர்ந்தபோது நாட்டில் புவியியல்
ரீதியான தமிழ் சிங்கள முனைவாக்கம்
தீவிரப்பட்டிருக்கக் கூடும். இதுவே 12ஆம்
நூற்றாண்டளவில் யாழ்ப்பாண அரசின்
தோற்றத்துக்கும் வித்திட்டது எனலாம்.
இதன் பின்னரும் பெருமளவில் தமிழர் குடியேற்றம்
இடம் பெற்றது பற்றிய செய்திகளைப்
பிற்காலத்தில் யாழ்ப்பாண வரலாறு கூற
எழுதப்பட்ட வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை
போன்ற நூல்களிற் காணலாம். ஆரம்பத்தில்
வன்னியர் குடியேற்றமும், தொடர்ந்து வேளாளர்
குடியேற்றங்களும் ஏற்பட்டதாக இந்நூல்கள் மூலம்
தெரிய வருகின்றது. இலங்கையின் கிழக்குக்
கரையோரப் பகுதிகளிலும் பெருமளவு தமிழர்
குடியேற்றங்கள் இருந்தன. திருகோணமலை,
மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற
குடியேற்றங்கள் பற்றி வரலாற்று நூல்கள்
குறிப்பிடுகின்றன.
மக்கள் பரம்பல்
இலங்கை குடிமக்களான தமிழர்கள் பொதுவாக இரண்டு
பிரிவினராகக் கருதப்படுகிறார்கள். நாட்டின்
வடக்குக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த
தமிழர்கள், அப்பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு
நீண்ட காலமாக வாழ்ந்து வருவதன் காரணமாக
அவர்கள் இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை
வம்சாவழி தமிழர் எனப்படுவர்.
இன்னொரு பிரிவினர் பிரித்தானியர்
ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மத்திய மலையகப்
பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை, இறப்பர்,
கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச்
செய்கைகளுக்காகத் தமிழ் நாட்டிலிருந்து
அழைத்துவரப்பட்ட வேலையாட்களின்
பரம்பரையினராவர். இவர்கள் இன்றும் நாட்டின்
மத்திய பகுதியிலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில்
பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள்.
அரசாங்கத்தின் புள்ளிவிபரத் திணைக்கள
ஆவணங்களில் இவர்கள் இந்தியத் தமிழர் என்றே
குறிப்பிடப் படுகிறார்கள்.
சமூகப் பண்புகள்
இலங்கை தமிழர்கள் தாய்வழி கலந்த மரபை
பின்பற்றுபவர்கள். பொதுவாக திருமணமான ஆண்கள்,
பெண்கள் வீடுகளில் சென்று வசிப்பதுடன், ஒரு
குடும்பத்தின் அனைத்து பெண்களும் தலைமுறை
ரீதியாக ஒரே வீட்டிலேயே வசிக்கின்றனர்.
பெண்களே குடும்பத்தின் தலைவர்களாக
கொள்ளப்படுவதுடன் ஆண்கள் அவர்களின்
பாதுகாவலராகவே கருதப்படுவர். குடும்பத்தின்
சொத்துரிமை அனேக சந்தர்பங்களில் அந்த
குடும்பத்தின் பெண்களையே பொதுவாக சாரும்.
family values
பிரதேச உட்பிரிவுகள்
இலங்கைத் தமிழர்கள், பண்பாடு மற்றும் மொழி
அடிப்படையிலாக ஒரே ரீதியாகவிருந்த போதும்,
சிறு சிறு வேறுபாடுகளின் அடிப்படையில்
பின்வரும் பிரிவுகளாக கொள்ளலாம்.
1. யாழ்ப்பாணத் தமிழர்
2. வன்னித் தமிழர்
3. மன்னார் தமிழர்
4. திருகோணமலை தமிழர்
5. மட்டக்களப்புத் தமிழர்
6. வடமேற்குத் தமிழர்
7. கொழும்புத் தமிழர்
8. வடமத்தியத் தமிழர்