|

தழைத்தோங்கட்டும் தமிழர் பண்பாடு
ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி,
மூங்கில்போல் பரவி, முடிவில்லாமல்
வாழ்ந்திருப்போம்' என்று கூறி பெரியோர் நம்மை
வாழ்த்துவதை அறிந்திருப்போம்.
இந்த வாழ்த்து மொழிக்கேற்ப தமிழர்கள்
வாழ்வும், பண்பாடும் வாழ்நிலையும்
தொன்றுதொட்டு தடையின்றி தொடர்ந்துக்
கொண்டிருக்கிறது. தமிழர்களின்
கொண்டாட்டங்களில் குறிப்பிடத்தக்கது தமிழர்
திருநாளாம் தைப்பொங்கல் புத்தாண்டு.
நெற்பயிர் வளர்ந்து, கதிராகி முதிர்ந்து
அறுவடை செய்யப்பட்டுப் புது நெல்லாகி
பத்தாயத்திற்கு வந்து சேர்ந்த அதனை குத்தி
அரசியாக்கி, அந்த புது அரசியை, மஞ்சள்
மாலையிட்ட புதுப் பானையிலிட்டு, வெல்லச் சுவை
சேர்த்துப் பொங்கி, அது பொங்கி வரும்போது
பொங்கலோ பொங்கல் என்று குரலெழுப்பி தமிழன்
கொண்டாடு்ம் தலையாய பண்டிகை பொங்கல்.
அந்த வகையில் அறுவடைத் திருநாளாகவும்
பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. தவிர,
விவசாயத்திற்கும், வீட்டிற்கும் அன்றாடம்
பயன்படும் கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து,
அவற்றை ஆதவனுக்குப் படைத்து, நாமும் உண்டு,
வாயில்லா ஜீவன்களுக்கும் அளித்து மகிழும்
திருநாளாகவும் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு
வருகிறது.
வீட்டிற்கு வெளியே முற்றத்தில்
அடுப்புக்கட்டிகளை வைத்து பனை ஓலைகளைக்
கொண்டும், புதிய விறகுகளைக் கொண்டும்
புத்தரிசியை புதுப்பானையில் இட்டு, சர்க்கரை
அல்லது வெல்லம் உள்ளிட்டவற்றைக் கொண்டு
பொங்கல் படைப்பதுதான் தமிழரின் பொதுவான வழமை.
வீட்டு வாசலில் பொங்கல் படைப்பதற்கு ஓரிரு
தினங்களுக்கு முன்பே முற்றத்தை
சுத்தப்படுத்தி, பெயிண்டு அல்லது சுண்ணாம்பு
பூசி, காவி உள்ளிட்ட வண்ணங்களைக் கொண்டு
அழகுபடுத்தி, பொங்கல் நாளன்று அதிகாலையில்
சூரியனுக்கு படையலிடுவதே இப்பண்டிகையின்
சிறப்பு.
பொங்கல் மட்டுமின்றி கரும்பு, கிழங்கு
வகைகள், காய்கறிகள், மஞ்சள் குலை
உள்ளிட்டவற்றையும் படைப்பதை இன்றளவும்
பெரும்பாலான தென் மாவட்டங்களில் மக்கள்
வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்டவைதான் தொன்றுதொட்டு
கடைபிடிக்கப்படும் பொங்கல் கொண்டாட்டங்கள்
எனலாம். மாட்டுப் பொங்கல் முடிந்து ஒரு சில
கிராமங்களில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டும்
நடத்தப்படுவதுண்டுஆனால், இந்த கொண்டாட்டங்கள்
எல்லாமே நடுத்தர மற்றும் சிறு நகரங்கள்,
கிராமங்களில் மட்டுமே இன்றும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
சென்னை போன்ற பெருநகரங்களிலும், கோவை,
ஈரோடு போன்ற தொழில் நகரங்களிலும் பொங்கல்
திருநாள் வீடுகளின் முற்றங்களில்
கொண்டாடப்படுவதில்லை.
குக்கர் பொங்கல்
சமையலறையில் எரிவளியை அடுப்பைக் கொண்டு
குக்கரில் பொங்கல் வைத்து, அவற்றை
வீட்டிற்குள்ளேயே பூஜையறையில் படைத்து
வழிபடுவதைப் பார்க்கிறோம்.
தமிழர் திருநாளின் உண்மையான கொண்டாட்டங்கள்
இந்த நகரங்களில் வசிப்போருக்கும், அவர்களின்
குழந்தைகளுக்கும் தெரிவதில்லை.
வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லித்தான்
கிராமங்களில் நடைபெறும் பொங்கல் பண்டிகையை
நகரங்களில் வளரும் குழந்தைகள் அறிந்துகொள்ள
முடிகிறது.
இந்தநிலை மாறி ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது
2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ கிராமங்களில்
நடைபெறும் பொங்கல் விழாக்களை நம் வீட்டு இளைய
தலைமுறையினருக்கு காண்பிப்பதற்காகவாவது,
கிராமங்களுக்கு நாம் செல்ல வேண்டும்.
அப்போதுதான் தமிழர் திருநாளின் தொன்மை,
அடுத்த - எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு
சேர்க்கப்படும்.
பெருநகரங்களில் பணத்தை மட்டுமே நோக்கிய
வாழ்வில் இருந்து பொங்கல் தோறும், பண்பாட்டை
நோக்கிய பயணத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வோமாக.
தமிழர் பண்பாடு, வீர விளையாட்டு போன்றவை
ஆல் போல் தழைக்க... வாசகர்கள் சார்பில் நமது
வாழ்த்துக்கள்.
Home |