வாடா தம்பி
வாடும் பயிருக்கு வான்மழையாய்
வாடா தம்பி வாடா!
வறட்டும் தாகம் தீர்த்திடவே
வாழ்க்கை முழுதும் வாடா!
பாடும் பறவைக்குக் கூடாக
வாடா தம்பி வாடா!
பலநாள் கனவும் நனவாக
பலமாய் சேர்ந்து வாடா!
ஓடும் நதிக்குக் கரையாக
வாடா தம்பி வாடா!
ஓயா முயற்சி வென்றிடவே
ஓய்வே இன்றி வாடா!
நாடும்உயர நாமும் உயர
நலமாய் நீயும் வாடா!
நாமே உலகின் உதயமென
நாளும் நாளும் வாடா!
தேடும் மகிழ்ச்சி மனதில்வர
தேனாய் நிலவாய் வாடா!
தேவைகள் தீர சேவைகளோடு
தென்றலைப் போல வாடா!
-
வெ.தமிழழகன்
|