|

மரணம் நடந்த வீதி
சத்தமிட்டு
கால்களைக் கட்டிக் கொண்டு
கதறி அழுது
புலம்பியது சுற்றம்.
கதறி அழாதவர்கள்
அன்பு குறைந்தவர்களாய்
கருதப்பட்டார்கள்.
திரட்டிய
கண்ணீர் துளிகளை
முந்தானைகளில் சேமித்து
கூட்டம்
கடந்த பின்,
ஜாமங்களின்
குறட்டை ஒலிகளையும்
மீறி
இருட்டின் விழிகளிலிருந்து
விழுந்து கொண்டிருந்தன
மெளனமான கண்ணீர் துளிகள்.
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தில்
பளீரிட்டது
இறந்து போனவரின்
கண்ணீர் விழிகள்.
|