மண்ணுலகில் முப்பாலின் மணத்தைப்
பரப்பணும்!

இருள் நிறைந்த பாதையிலே உலகம் போகுது!
இரக்கமில்லா குணத்தோடு நாளும் வளருது!
பொருள் தேடும் முயற்சியிலே பொழுதைத் தள்ளுது!
பொருளில்லா வாழ்வுக்கே பலியே யாகுது!
அருள்தேட முடியாமல் உடலை வளர்க்குது!
அறிவில்லா மூடர்போல வினையே சேர்க்குது!
உருவானத் திருக்குறளைப் படிக்க மறுக்குது!
உயர்வான எண்ணமின்றி மடிந்தே வீழுது!!
உள்ளமெல்லாம் நல்லதையே நினைத்து வாழணும்!
உள்ளவரை மாற்றார்க்கும் உதவி புரியணும்!
பிள்ளையெலாம் பண்புடனே பழகச் செய்யணும்!
பிழையில்லாப் பாதையிலே நடத்திச் செல்லணும்!
வெள்ளமெலாம் குறளமுதாய் விரைந்தே பரவணும்!
வேள்வியெலாம் குறள்மறையை ஓதிப் பார்க்கணும்!
கள்வரெல்லாம் திருந்திடவே கல்வி நல்கணும்!
காலமெல்லாம் திருக்குறளைக் கனிவாய்ப் போற்றணும்!!
கடமையினைச் செய்திடவே கருத்தில் கொள்ளணும்!
கலங்காமல் இருந்திடவே உழைத்து வாழணும்!
உடைமையினை யாவர்க்கும் உதவி மகிழணும்!
உருவாகும் சமுதாயம் உயரப் பார்க்கணும்!
நடமாடும் தெய்வத்தையே நாளும் வணங்கணும்!
நன்றியினை நாளும்நாளும் நினைவில் கொள்ளணும்!
மடமையினை மாய்த்திடவே முயற்சி செய்யணும்!
மண்ணுலகில் முப்பாலின் மணத்தைப் பரப்பணும்!!
(பாவடிவம்)
குறள் முரசு.மாதி.சி.குப்பன்