|

சுண்டெலி எழுதிய சிறுகதை
ஒரு கிராமத்தின் குடிசை ஒன்றின் பொந்தில் ஒரு
சுண்டெலி வசித்து வந்தது.
அது பகல் முழுவதும் பொந்தில் அமர்ந்து
புத்தகம்
படித்துக்கொண்டிருக்கும். அதனிடம் சில
புத்தகங்கள் இருந்தன. அக்கம்பக்கத்து
எலிகளிடமிருந்து இரவல் வாங்கிய புத்தகங்கள் அவை. அந்தப்
புத்தகங்களில்
எலிகளால் எலிகளுக்காக எழுதப்பட்ட கதைகளும்
கட்டுரைகளும் நிறைந்திருக்கும்.
அதிகமாகப் படித்ததால் தானும் கதை எழுதி ஒரு எழுத்தாளராக ஆக
வேண்டும் என்று
விரும்பியது கிராமத்துச் சுண்டெலி. அது
"எழுத்து வேந்தன்'
என்று தனக்கு ஒரு
புனை பெயரைச் சூட்டிக்கொண்டது. அப்படிப் புனை பெயர்
வைத்துக்கொண்ட பிறகும்
அதனால் எழுத முடியவில்லை. ஏனெனில் அதற்கு
முக்கியமான எந்த அனுபவமும்
ஏற்படவில்லை. எனவே எழுதுவதற்கு எந்த விஷயமும்
இல்லை. அதன் கிராமத்து
வாழ்க்கை அமைதியாகவும் நிம்மதியாகவும் சென்றுகொண்டிருந்தது.
கிராமத்துச் சுண்டெலி மாலை நேரமானதும் வெளியே
உலாவப் போகும். வயல்
வரப்பில் அமர்ந்து,
மறையும் சூரியனின் அழகைப் பார்த்து ரசிக்கும்.
பயிர்களை
அசைத்தபடி வரும் தென்றல் காற்றை அனுபவித்து
ஒரு பாட்டுப் பாடும். பிறகு
ஏதாவது கிழங்குகளையோ கனிகளையோ நிறையச் சாப்பிடும்.
அப்புறம் பொந்திற்குத் திரும்பி கதை எழுதும்
முயற்சியில் ஈடுபடும். வெகு
நேரம் அப்படிக் கண்விழித்துக் கற்பனை செய்து பார்க்கும்.
ஆயினும்
எழுதுவதற்கு ஏற்ற விஷயம் எதுவும் கிடைக்காமல்
சோர்வுடன் படுத்துறங்கும்.
காலையில் ஒரு சிட்டுக் குருவி எலிப் பொந்தின்
மேல் வந்து நிற்கும்:
""சுண்டெலி நண்பனே,
நீ உன் கதையை எழுதிவிட்டாயா?''
என்று கேட்கும்.
சிட்டுக் குருவியின் கேள்விக்கு அமைதியாகப்
பதில் சொல்லும் கிராமத்துச்
சுண்டெலி: ""இல்லை சிட்டே! இன்னும் நான் ஒரு கதை கூட
எழுதவில்லை. ஆனால்
எப்படியும் நான் ஒரு அருமையான கதையை எழுதியே
தீருவேன். இது உறுதி. அப்போது
"யார்
இந்த எழுத்து வேந்தன்?'
என்று எலிகள் உலகமே என்னைத் தேடி வந்து
பாராட்டும்''.
சிட்டுக்குருவி,
பக்கத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் ஒரு புழுவையோ
பூச்சியையோ பிடித்து விழுங்கிவிட்டுச் சொல்லும்: ""உன்
நம்பிக்கையை நான்
பாராட்டுகிறேன்! உன் முயற்சியில் நீ
வெற்றியடைய என் வாழ்த்துகள்!''
கிராமத்துச் சுண்டெலிக்கு ஒரு நண்பன் உண்டு.
அதுவும் ஒரு சுண்டெலிதான்.
அது தொலைவில் உள்ள நகரத்தில் வாழ்ந்து வருகிறது. அந்த நகரம்
பெரிய நகரம்.
அகலமான பெரிய சாலைகளும்,
எண்ணற்ற வாகனங்களும்,
பெரிய மாடி வீடுகளும் உள்ள
நகரம். ஒரு மாடி வீட்டில்தான் நகரத்துச் சுண்டெலி வசித்தது.
மாடி வீட்டில்
பொருட்கள் வைக்கும் அறை ஒன்று இருக்கிறது.
அந்த அறைக் கூரையின் கீழ் உள்ள
பரண்தான் நகரத்துச் சுண்டெலியின் வீடு.
ஒரே இடத்தில் வாழ்ந்து கொஞ்சம்
சலித்துப்போய்விட்டது நகரத்துச் சுண்டெலி.
எங்காவது வெளியூருக்குச் சென்று வந்தால் பரவாயில்லை என்று
தோன்றியது. எனவே
ஒரு நாள் காலையில் தன் நண்பன் கிராமத்துச்
சுண்டெலியைப் பார்ப்பதற்காகப்
புறப்பட்டது. ஒரு நாள் முழுவதும் பயணத்திலேயே
கழிந்தது. அது மாலை நேரத்தில்
கிராமத்துச் சுண்டெலி இருக்கும் குடிசை வீட்டை அடைந்தது.
தன் நண்பனைப் பார்த்ததும் மகிழ்ச்சிகொண்டு
துள்ளிக் குதித்தது
கிராமத்துச் சுண்டெலி: ""அடடே! வா நண்பனே வா! உன்னைப் பார்த்து
எவ்வளவு
நாட்களாகிவிட்டன. நலமாக இருக்கிறாயா?''
என்று வரவேற்று தன் நண்பனைக்
கட்டிப்பிடித்துக்கொண்டது.
கிராமத்துச் சுண்டெலி தன் விருந்தினனை
அன்புடன் உபசரித்தது.
நாற்காலியில் அமரவைத்து தேனீர் கொடுத்தது. தன் நண்பன்
குளிப்பதற்கான
ஏற்பாடுகளைச் செய்தது. தன்னிடம் இருக்கும்
பொருட்களைக் கொண்டு சுவையான உணவு
தயாரிப்பதற்காக பரபரப்புடன் அங்கும் இங்கும் ஓடியது.
நாற்காலியில் கம்பீரமாக கால்மேல் கால்போட்டு
அமர்ந்தது நகரத்துச்
சுண்டெலி. தேனீரைச் சுவைத்தபடியே தலையசைத்து சுற்றிலும்
நோட்டமிட்டது.
அந்தப் பொந்தின் உட்புறம் அழுக்கும் தூசியும்
நிறைந்திருந்தது. அங்கங்கே
வெடிப்புகள் தெரிந்தன. ஒட்டடை படிந்திருந்தது. கிராமத்துச்
சுண்டெலியின்
புத்தகங்களும்,
எழுதிக் கிழித்துப்போட்ட காகிதங்களும் எங்கும் சிதறிக்
கிடந்தன.
நகரத்துச் சுண்டெலி "டக்'
என்று ஓசை வரும்படி தேனீர்க் குவளையைக் கீழே
வைத்தது. அருவருப்புடன் முகத்தைச்
சுளித்துக்கொண்டு கேட்டது: ""ஓ,
இதுதான்
நீ வசிக்கும் பொந்தா?
என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது!''
கிராமத்துச் சுண்டெலி,
""ஆமாம்.
கிராமத்து வாழ்க்கை இப்படித்தான்
இருக்கும். என்ன செய்வது!''
என்று சொல்லிச் சமாளித்தது. அது
கிழங்குகளையும்,
தேங்காய்த் துண்டுகளையும்,
பழங்களையும் தட்டுகளில்
வைத்துக் கொண்டு வந்தது. தன் நண்பனின்
முன்னால் வைத்துவிட்டுப் பணிவுடன்
சொன்னது:
""நீ
வயிறு நிறையச் சாப்பிட வேண்டும் நண்பனே. வேக
வைத்த கிழங்கும்,
தேனில் நனைத்த தேங்காய்த் துண்டுகளும்,
உப்பும் மிளகும் தூவிய
பழத்துண்டுகளும் இருக்கின்றன. நன்றாகச்
சாப்பிடு!''
நகரத்துச் சுண்டெலி முகத்தைக் கோணலாக
வைத்துக்கொண்டு இகழ்ச்சியாகக் கேட்டது: ""நீ
தினமும் இவற்றைத்தான் தின்று வாழ்கிறாயா?''
""ஆமாம்.
ஏன் இப்படிக் கேட்கிறாய்?''
""இவ்வளவு
மோசமான,
சுவையற்ற உணவுகளை எப்படிச் சாப்பிடுவது?''
""இவை
மோசமானவை என்றும் சுவையற்றவை என்றும் யார்
சொன்னது?
கொஞ்சம் சாப்பிட்டுப் பாரேன்...''
நகரத்துச் சுண்டெலி ஒரு துண்டு கிழங்கை
எடுத்துக் கடித்துப் பார்த்தது.
""ச்சீச்சீ...த்தூ...த்தூ...''
என்று துப்பியது. ""என்ன இவ்வளவு
பயங்கரமாகக் கசக்கிறது. இதைப்போய்த் தின்னச் சொல்கிறாயே!''
என்று
கடிந்துகொண்டது.
என்ன செய்வது என்று தெரியாமல் சோர்ந்த
முகத்துடன் நின்றிருந்தது
கிராமத்துச் சுண்டெலி. தன் விருந்தினனுக்கு என்ன சாப்பிடக்
கொடுப்பதென்று
அதற்குப் புரியவில்லை.
நகரத்துச் சுண்டெலி கேட்டது: ""இங்கே பிரியாணி
கிடைக்குமா?''
கிராமத்துச் சுண்டெலி திகைப்புடன்,
""பிரியாணியா?
என்ன அது?''
என்று கேட்டது.
""என்ன!
உனக்குப் பிரியாணிகூடத் தெரியாதா?
சரி,
ஆம்லெட்,
பிரட் டோஸ்ட்,
கட்லெட்,
பிரைடு ரைஸ்,
நூடுல்ஸ்...இப்படி ஏதாவது தெரியுமா?''
கிராமத்துச் சுண்டெலி விழி பிதுங்கி நின்றது.
நகரத்துச் சுண்டெலி சொன்ன எதையுமே அது
கேள்விப்பட்டிருக்கவில்லை.
இவ்வளவு முட்டாளாக இருக்கிறோமே என்று தன்னைத்
தானே நொந்துகொண்டது.
நகரத்துச் சுண்டெலி,
பெருமையுடன் கிராமத்துச் சுண்டெலியைப்
பார்த்துச்
சொன்னது:
""நீ
மிகவும் பாவம் நண்பனே! நீ கிராமத்தில்
வாழ்ந்து காலத்தை
வீணடித்துவிட்டாய். ஐயோ பாவம்... நீ இதுவரை ஆம்லெட்கூட
சாப்பிட்டதில்லை.
இது பெரிய துயரம்தான்! நல்ல வாழ்க்கையென்றால்
என்னவென்று உனக்குத்
தெரியாமல்போய்விட்டது. நீ ஏன் இங்கே கிடந்து
சிரமப்படுகிறாய்?
என்னுடன்
நகரத்திற்கு வா! நான் அங்கே ராஜாவைப்போல வாழ்கிறேன்!''
கிராமத்துச் சுண்டெலி மெüனமாக
இருந்தது.
நகரத்துச் சுண்டெலி அங்கும் இங்கும்
நடந்துகொண்டே பேசியது:
""நான்
வசிக்கும் வீடு எப்படியிருக்கும் தெரியுமா?
அது பெரிய
அரண்மனையைப்போல இருக்கும். சுவரில் பளபளக்கும் நிறங்கள்
பூசப்பட்டிருக்கும். தரை கண்ணாடிபோல மின்னும். ஒவ்வொரு
அறையிலும் தொலைக்
காட்சிப் பெட்டிகள் உண்டு. இரவுகளில் அலங்கார
விளக்குகள் அற்புதமாக
ஒளிவீசும். வீட்டில் உள்ள எல்லோருமே செல்போன்
வைத்திருக்கிறார்கள். நீயும்
செல்போன் வைத்திருந்தால் நான் உன்னிடம் அடிக்கடிப் பேச வசதியாக
இருக்கும்.
போனது போகட்டும். இனிமேலாவது நீ என்னுடன்
நகரத்திற்கு வந்து நல்லவிதமாக
வாழ்ந்திரு...''
நகரத்துச் சுண்டெலி கூறியதைக் கேட்டதும்,
கிராமத்துச் சுண்டெலிக்கு ஆசை
ஏற்பட்டுவிட்டது. நகரத்திற்குச் சென்று தினமும் பிரியாணியும்
நூடுல்ஸıம்
சாப்பிட்டு வசதியாக வாழலாமே என்று நினைத்தது. அது சம்மதம்
தெரிவித்தது.
விடிந்ததும் இரண்டும் புறப்படுவதற்கான
ஏற்பாடுகளைச் செய்தன.
அப்போது
பொந்தின் முகப்பில் வந்து நின்றது
சிட்டுக்குருவி. நகரத்துச் சுண்டெலியைப்
பார்த்துவிட்டு,
கிராமத்துச் சுண்டெலியிடம் விசாரித்தது: ""இது
யார்
சுண்டெலியே,
உன் நண்பனா?
பார்த்தால் பெரிய அதிகாரியைப்போலத்
தோன்றுகிறதே...''
கிராமத்துச் சுண்டெலி மகிழ்ச்சியுடன் சொன்னது:
""ஆமாம்,
ஆமாம்! என்
நண்பன்தான். நகரத்திலிருந்து வந்திருக்கிறான்.
பெரிய பணக்காரன்...''
பிறகு
சிட்டுக்குருவியை தன் நண்பனிடம் அறிமுகம் செய்து வைத்தது:
""இந்தச்
சிட்டுக் குருவி என் நீண்ட நாள் நண்பன்.
மிகவும் நல்ல பறவை...''
ஆனால்,
""இந்த அற்பக் குருவியோடெல்லாம் பேசி நான் என் நேரத்தை
வீணாக்க
மாட்டேன்!''
என்று முகத்தைத் திருப்பிக்கொண்டது நகரத்துச் சுண்டெலி.
அவமானப்பட்ட சிட்டுக்குருவிக்குக் கோபம் வந்தது. ""இந்தத்
திமிர்பிடித்தவனை
நம்பாதே!''
என்று கிராமத்துச் சுண்டெலியிடம் சொல்லிவிட்டுப் பறந்து
சென்றது. இரண்டு சுண்டெலிகளும் நகரத்திற்குப் புறப்பட்டன.
நாள் முழுதும் பயணம் செய்து மாலை நேரத்தில்
அவை ஒரு மாளிகையை அடைந்தன.
""பார்த்தாயா,
இதுதான் என் வீடு!''
என்று பெருமையுடன் சொன்னது நகரத்துச்
சுண்டெலி. கிராமத்துச் சுண்டெலி வியந்தது:
""இந்த மாளிகை மிகவும் பெரிதாக
இருக்கிறது நண்பனே! இதுபோன்ற ஒரு மாளிகையை நான் பார்த்ததே
இல்லை!''
நகரத்துச் சுண்டெலி,
கிராமத்துச் சுண்டெலியை உடனடியாக உணவு
மேசைக்கு அழைத்துச் சென்றது.
""வா,
இங்கே மிகவும் சுவையான உணவுகள் இருக்கின்றன. என்ன
வேண்டுமானாலும்
சாப்பிடு. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடு!''
என்று மேசை மீது தாவியது.
அதைத் தொடர்ந்து கிராமத்துச் சுண்டெலியும் தாவியது. அங்கு
பாத்திரங்களில்
வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளைப் பார்த்து
கிராமத்துச் சுண்டெலி ஆனந்தக்
கூத்தாடியது. அன்பு மிகுதியால் நகரத்துச் சுண்டெலியைக்
கட்டிப்பிடித்து
முத்தமிட்டது.
""நீதான்
என் உண்மை நண்பன். எனக்கு இப்படிப்பட்ட ஒரு
நல்ல வழியைக்
காட்டினாயே,
உனக்கு நன்றி. நீ வராவிட்டால் நான் இன்னும்
அந்தப்
பட்டிக்காட்டிலேயே கிடந்திருப்பேன். கதை,
கவிதை என்று என் நேரத்தை
வீணாக்கியிருப்பேன். உனக்கு என் நன்றி!''
பெருமிதப் புன்னகையுடன் நகரத்துச் சுண்டெலி
அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டது.
உணவுப் பொருட்களிலிருந்து வந்த வாசனை மேலும்
பசியைத் தூண்டியது.
கிராமத்துச் சுண்டெலி அவசர அவசரமாக ஒரு மீன் துண்டைக் கடித்தது.
அப்போது...
""மியாவ்...''
என்றொரு சப்தம் கேட்டது.
கடுமையான பசியில் மீனைச்
சுவைத்துக்கொண்டிருந்த சுண்டெலிகளுக்கு அந்தச்
சத்தம் கேட்கவில்லை. பிறகு மீண்டும் அந்த ஓசை
வந்தது.
""மியாவ்...''
திடீரென்று ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக ஒரு
அடி உயரம் துள்ளியது
நகரத்துச் சுண்டெலி. ""ஐயோ,
ஐயோ! ஓடு ஓடு! பூனை வந்துவிட்டது. பூனை
வந்துவிட்டது!''
என்று அலறியது.
நகரத்துச் சுண்டெலி ஒரே பாய்ச்சலாகத் தாவி
சுவரில் ஏறியது. பிறகு
பரணுக்கு ஓடிச் சென்றது. தட்டுத்தடுமாறி கிராமத்துச்
சுண்டெலியும் அதன்
பின்னால் ஓடியது.
இரவு நேரம். பரணில் அரை இருட்டாக இருந்தது.
அங்கே நிறைய எலிகள்
தடதடவென்று ஓடித் திரிந்துகொண்டிருந்தன. எந்த எலியும் புதிதாக
வந்த
கிராமத்துச் சுண்டெலியைக் கண்டுகொள்ளவில்லை.
ஏதோ சாதனை புரிந்துவிட்டதைப்போல நகரத்துச்
சுண்டெலி சொன்னது: ""எவ்வளவு
சாமர்த்தியமாக அந்தப் பூனையை ஏமாற்றிவிட்டு ஓடி வந்தேன்
பார்த்தாயா?''
கிராமத்துச் சுண்டெலி கவலையுடன் கேட்டது:
""அந்தப் பூனை இங்கேயே வசிக்கிறதா நண்பனே?
அடிக்கடி நம்மைத் தொந்தரவு செய்யுமா?''
""என்ன
இப்படிக் கேட்டுவிட்டாய்?
அதைப்போல இங்கே பல பூனைகள்
இருக்கின்றன. நம்மைப் பார்த்தால் ஒரே அடியில் நம்மைக் கொன்று
தின்றுவிடும்.
அவற்றிற்குத் தெரியாமல்தான் நாம் இங்கே ஏதாவது
சாப்பிட வேண்டும்!''
நகரத்துச் சுண்டெலியின் பேச்சு,
கிராமத்துச் சுண்டெலிக்கு மிகவும்
அச்சத்தை ஏற்படுத்தியது. பூனையைக் கண்டதால் ஏற்பட்ட நடுக்கம்
இன்னும்
நிற்கவில்லை. அதற்குத் தூக்கம் வரவில்லை.
தூங்கும்போது பூனை வந்து
விழுங்கிவிடுமோ என்ற பதற்றத்துடன்
அமர்ந்திருந்தது. வெகு நேரத்திற்குப்
பிறகு தன்னையறியாமல் உறங்கத் தொடங்கியது.
அதை திடீரென்று எழுப்பியது நகரத்துச்
சுண்டெலி:
""எழுந்து
வா,
எழுந்து வா...இப்போது உணவு மேசைக்கருகில் எந்தப் பூனையும்
இல்லை. கீழே போனால் ஏதாவது சாப்பிடக்
கிடைக்கும்,
சீக்கிரம் வா!''
சோர்வுடன் எழுந்த கிராமத்துச் சுண்டெலி தன்
நண்பனைப் பின்தொடர்ந்து
சென்றது. இரண்டு சுண்டெலிகளும் தயங்கித் தயங்கி உணவு மேசையை
நெருங்கின.
மேசை மீது இனிப்புப் பணியாரங்கள் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன.
தாளமுடியாத பசியுடன் அவற்றைக் கடித்தன
சுண்டெலிகள். அப்போது...
""லொள்
லொள்...''
என்ற பயங்கரமான சத்தம் கேட்டது.
""ஐயோ!
சீக்கிரம் ஓடு,
சீக்கிரம் ஓடு! நாய் நம்மைக் கொல்ல வருகிறது!''
என்று அலறியபடி நகரத்துச் சுண்டெலி ஓடியது.
அதன் பின்னால் தலைதெறிக்க
ஓடியது கிராமத்துச் சுண்டெலி. விழுந்து
புரண்டு ஓடி,
இரண்டு சுண்டெலிகளும்
பரணை அடைந்தன. களைப்பு மிகுதியால் அப்படியே படுத்துவிட்டன.
""இங்கே
நாய்கூட இருக்கிறதா?
எத்தனை நாய்கள் இருக்கின்றன?''
என்று கிராமத்துச் சுண்டெலி பரிதாபமாகக் கேட்டது.
""அதை
ஏன் கேட்கிறாய் போ! நாம் தப்பித்ததே பெரிய
காரியம். இங்கே இரண்டு
நாய்கள் இருக்கின்றன. நம்மைக் கடித்துக் குதறுவதற்காக எப்போதும்
இங்கேயே
அவை சுற்றிக்கொண்டிருக்கும்!''
என்று மூச்சுத் திணறியபடி,
நகரத்துச்
சுண்டெலி சொன்னது.
இரண்டும் மறுபடியும் படுத்தன. பசி தாங்காமல்
கிராமத்துச் சுண்டெலி
முனகியது. வயிறு நிறையாவிட்டாலும் பரவாயில்லை. கொஞ்சம் உணவு
கிடைத்தாலும்
நன்றாக இருக்குமே என்று ஏங்கியது. நாய்கள்
மோப்பம் பிடித்து பரணுக்கு
வந்துவிடுமோ என்று நினைத்துப் பதறியது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு கிராமத்துச்
சுண்டெலி உறங்கியது. சற்று நேரத்திற்குள்
தட்டி எழுப்பியது நகரத்துச் சுண்டெலி.
""எழுந்திரு,
எழுந்திரு...இப்போது பூனைகளும் நாய்களும் வெளியே
சென்றுவிட்டன. வா,
கீழே போய் ஏதாவது சாப்பிடுவோம்''
என்று சொன்ன நகரத்துச்
சுண்டெலி முன்னால் சென்றது. கிராமத்துச்
சுண்டெலி பயத்துடனும்
தயக்கத்துடனும் பின்னால் சென்றது. இரண்டும் உணவு மேசையை
நெருங்கின.
""இந்தா,
இந்த இட்டிலியை வேகமாகச் சாப்பிடு!''
என்று இட்டிலிகள் இருந்த
பாத்திரத்தை நகரத்துச் சுண்டெலி சுட்டிக்காட்டியது. ஆவலுடன்
இட்டிலியை ஒரு
கடி கடித்தது கிராமத்துச் சுண்டெலி. பிறகு
ஆவேசத்துடன் மேலும் மேலும்
கடித்துத் தின்றது. இட்டிலிப்
பாத்திரத்திற்குள் அமர்ந்து இரண்டு கைகளாலும்
அள்ளி அள்ளித் தின்றது. வயிறு நிறைந்தது.
பிறகு சப்பாத்தியைக் கொஞ்சம் தின்றது.
தோசையைக் கடித்தது. இதையும்
கொஞ்சம் தின்று வைப்போமே என்று பிஸ்கட்டில் வாய் வைத்தது.
அப்போது
நகரத்துச் சுண்டெலி உயிரே போவதுபோல அலறியது:
""ஐயோ! ஓடு ஓடு! வீட்டு அம்மாள்
கையில் தடியுடன் வருகிறாள்!''
விரைந்து வந்த எஜமானி,
ஓடும் சுண்டெலிகளை நோக்கி தடியை வீசி
எறிந்தாள்.
கிராமத்துச் சுண்டெலியின் முதுகில்
அடிபட்டுவிட்டது. அதற்கு மிகவும்
வலித்தது. நிறையச் சாப்பிட்டுவிட்டதால் வேகமாக
ஓட முடியவில்லை. ஆயினும்
உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் பாடுபட்டது. தட்டுத்தடுமாறி
ஓடியது. பரணை
அடைந்தது. அதற்கு முன்பே பரணுக்கு
வந்திருந்தது நகரத்துச் சுண்டெலி.
அடிபட்டு வந்த தன் நண்பனை நகரத்துச் சுண்டெலி
சமாதானப்படுத்தியது: ""பரவாயில்லை... வருத்தப்படாதே! சற்று நேரம் வலிக்கும்,
அவ்வளவுதான். நான்
எத்தனையோ முறை இதுபோல
அடிபட்டிருக்கிறேன்...சரி,
அதைவிடு. அந்த உணவுகள்
எவ்வளவு சுவையாக இருந்தன! வருகிறாயா,
நாம் இன்னொரு முறை உணவு மேசைக்குச்
செல்வோம்.
கிராமத்துச் சுண்டெலி எதுவும் பேசவில்லை.
நீண்ட நேரம் ஏதோ யோசித்தபடி இருந்தது. பிறகு
மென்மையாகச் சொன்னது:
""என்
அன்பான நண்பனே,
இனி நான் அந்த உணவு மேசைக்கு
வரமாட்டேன்...இந்த
இடத்தைவிட என் கிராமம் எவ்வளவோ மேலானது. என்
கிராமத்தில் வசதி குறைவுதான். ஆனால்
நான் அங்கே நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும்,
அச்சமில்லாமலும்
இருந்தேன். நாளைக் காலையில் நான் புறப்படுகிறேன் நண்பனே. என்
கிராமத்திற்கே
சென்றுவிடுகிறேன்!''
நகரத்துச் சுண்டெலி,
நகரத்திலேயே தங்கும்படிக் கேட்டுக்கொண்டது.
மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தியது. ஆனால்
கிராமத்துச் சுண்டெலி
கேட்கவில்லை. அது அடுத்த நாள் காலையில் தன் கிராமத்திற்குக்
கிளம்பியது.
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கிராமத்துச்
சுண்டெலியால் மறக்க முடியவில்லை.
தனக்கு ஒரு பெரிய பாடம் கிடைத்துவிட்டதாக அது உணர்ந்தது. அதை
மற்றவர்களிடம்
பகிர்ந்துகொள்ள விரும்பியது. எனவே அது தன்
அனுபவத்தை ஒரு கதையாக எழுதியது.
சில மாதங்கள் கடந்தன. ஒரு நாள் தபால்காரப்
பெருச்சாளி கிராமத்தில் ஒரு
முகவரியைத் தேடி அலைந்தது. ""இங்கே எழுத்து வேந்தன் என்னும்
பெயரில்
ஏதேனும் எலி இருக்கிறதா?''
என்று எல்லா எலிகளிடமும் விசாரித்தது. அந்த
வழியாக வந்த சிட்டுக்குருவி, ""எழுத்து வேந்தன் என்னும் சுண்டெலியை
எனக்குத் தெரியும். வாருங்கள் காட்டுகிறேன்''
என்று அழைத்துச் சென்றது.
தன் பொந்தின் வாயிலில் வந்து நிற்கும்
சிட்டுக்குருவியையும்,
தபால்காரப்
பெருச்சாளியையும் குழப்பமாகப் பார்த்தது கிராமத்துச் சுண்டெலி.
பெருச்சாளி சொன்னது: ""அடே,
உன்னைக் கண்டுபிடிப்பதற்குள் இந்தக் கிராமம்
முழுதும் சுற்றிவிட்டேன் அப்பா! நீதான்
எழுத்து வேந்தனா?
சரி,
இந்தா
உனக்கொரு பதிவுக் கடிதம் வந்திருக்கிறது.
கையெழுத்துப்போட்டு
வாங்கிக்கொள்...''
கையெழுத்துப் போட்டுக் கடிதத்தை வாங்கியது
கிராமத்துச் சுண்டெலி.
தபால்காரப் பெருச்சாளி மற்ற கடிதங்களை உரியவர்களிடம்
சேர்ப்பிப்பதற்காகச்
சென்றுவிட்டது.
அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்த
கிராமத்துச் சுண்டெலி சந்தோஷக்
கூச்சலிட்டது. அப்படியும் இப்படியும் துள்ளி நடனமாடியது.
""அப்படி என்னதான்
அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறது?
எனக்கும்தான் சொல்லேன்!''
என்று
கேட்டது சிட்டுக்குருவி.
கிராமத்துச் சுண்டெலி சொன்னது: ""கிராமத்துச்
சுண்டெலியும் நகரத்துச்
சுண்டெலியும் என்னும் தலைப்பில் நான் ஒரு கதை எழுதி
அனுப்பியிருந்தேன்.
"எலி
தேசம்'
பத்திரிகை ஆசிரியர் அதைப் பரிசுக்குரியக் கதையாகத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்.''
சுண்டெலியிடம் கைகுலுக்கி மகிழ்ச்சியைத்
தெரிவித்தது சிட்டுக்குருவி.
பிறகு இந்த நல்ல செய்தியை கிராமத்தில் உள்ள எல்லா எலிகளிடமும்
சொல்வதற்காகப் பறந்து சென்றது.
விரைவிலேயே "எலிதேசம்'
பத்திரிகையில்,
கிராமத்துச் சுண்டெலியின் கதை
வந்தது. அதை லட்சக்கணக்கான எலிகள் விரும்பிப்படித்தன. ஒரு எலி
இந்தக் கதையை
மனிதர்களின் மொழியில் மொழிபெயர்த்தது. பிறகு
உலகில் உள்ள சிறுவர்
சிறுமிகள் இதை ஆர்வத்துடன் படித்தார்கள்.
கிராமத்துச் சுண்டெலி உலகப் புகழ்
பெற்ற எழுத்தாளரானது.
|