|

திறமையான ஓவியன்!
ஒரு நாட்டில் புகழ் பெற்ற ஓவியன்
ஒருவன் இருந்தான். அந்த நாட்டு அரசனிடமிருந்து
அவனுக்கு அழைப்பு வந்தது.
மகிழ்ச்சியுடன் அரண்மனைக்கு சென்றான். அவனை
வரவேற்ற அரசன்,
""உன்
ஓவியத்
திறமையைப் பற்றி கேள்விப்பட்டேன். என்னை நீ
அப்படியே ஓவியமாக வரைந்து
தரவேண்டும்!''
என்று கேட்டான்.
""அரசே!
தங்கள் கட்டளையை அப்படியே நிறைவேற்றுகிறேன்!''
என்றான் அவன்.
அரண்மனை ஓவியர்கள் சிலர் அவனைச் சந்தித்தனர்.
அரசரை ஓவியமாக வரைவதில் உள்ள
சிக்கலைச் சொன்னார்கள். அதிர்ச்சி அடைந்த அவன்
சோகத்துடன் வீடு வந்து
சேர்ந்தான்.
அவனைப் பார்த்து அவன் மனைவி,
""ஏன்
சோகமாக இருக்கிறீர்கள்?
மகிழ்ச்சியாக அல்லவா இருக்க வேண்டும்.
அரண்மனையில் என்ன நடந்தது?''
என்று அன்புடன் கேட்டாள்.
""அரசர்
தன்னை அப்படியே ஓவியம் வரைந்து தரச் சொன்னார்!''
""அருமையான
வாய்ப்பு ஆயிற்றே. இதனால் உங்கள் புகழ் மேலும்
பரவுமே. மகிழ்ச்சி அடையவேண்டியதற்கு பதில் ஏன்
சோகமாக இருக்கிறீர்கள்?''
""நம்
அரசருக்கு ஒரு கண் குருடு அல்லவா?''
""ஆமாம்.
அதற்கு என்ன?''
""இதற்கு
முன் ஓவியன் ஒருவன் அரசரை அப்படியே ஓவியமாக
வரைந்திருந்தானாம்.
அதைப் பார்த்த அரசர் கோபம் கொண்டாராம்.
"உனக்கு என்ன ஆணவம் இருக்க
வேண்டும்?
என் ஒரு கண் குருடு என்று ஓவியம் வரைந்து
இருக்கிறாய்.
எல்லாருக்கும் இதை அறிவிக்கிறாயா?
இப்படிச் செய்த உனக்கு நூறு கசையடியும்,
இரண்டாண்டு சிறைத்தண்டனையும் விதிக்கிறேன்'
என்றாராம்!''
""இரண்டு
கண்ணும் தெரிபவரைப் போல் அரசரை ஓவியம்
வரைந்தால் என்ன?''
""அதைப்
போல ஒரு ஓவியன் படம் வரைந்து வந்தானாம். அதைப்
பார்த்த அரசர் கோபத்தின் உச்சிக்கே
சென்றுவிட்டாராம்.
"உள்ளதை
உள்ளபடி வரைவதுதானே ஓவியம். இந்த ஓவியத்தில்
எனக்கு இரண்டு
கண்களும் தெரிவதைப் போலப் படம் வரைந்துள்ளாயே.
என்னை நன்றாகப் பார்த்துச்
சொல். எனக்கு இரண்டு கண்களும் தெரிகின்றவனா?'
என்று கேட்டாராம். என்ன பதில்
சொல்வது என்று தெரியாமல் ஓவியன்
நடுங்கினானாம்!''
""அவனை
அரசர் என்ன செய்தார்?''
என்று கேட்டாள்.
""ஓவியம்
வரையத் தெரியாதவன் இவன். நூறு கசையடியும்,
நான்காண்டு சிறைத்
தண்டனையும் இவனுக்கு வழங்குகிறேன் என்று
கோபத்துடன் சொன்னாராம் அரசர்!''
""ஐயோ!
என்ன செய்வது?
உள்ளபடி வரைந்தாலும் தண்டனை. அரசர் மகிழுமாறு
ஓவியத்தில் சிறிய மாற்றம் செய்தாலும் தண்டனையா?''
""இந்த
ஆபத்திலிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறேன்
என்று தெரியவில்லை. அதனால்தான் சோகத்தில்
இருக்கிறேன்!''
அறிவு நிரம்பிய அவன் மனைவி சிந்தனையில்
ஆழ்ந்தாள். நல்ல வழி ஒன்று அவளுக்குத்
தோன்றியது.
தன் கணவனைப் பார்த்து,
""எந்த
ஆபத்திலிருந்தும் தப்பிக்க வழியுண்டு. நான்
சொல்வதுபோல ஓவியம் வரையுங்கள்!''
என்று வழிமுறைகளைச் சொன்னாள்.
மறுநாள் அரண்மனை சென்று அரசரை வணங்கினான்
அவன். ""அரசே! மற்றவர்களைப் போல
உங்களை நிற்க வைத்து ஓவியம் வரைய நான்
விரும்பவில்லை. சிறந்த வீரர்
நீங்கள். ஏதேனும் வீரச்செயலில்
ஈடுபட்டிருப்பது போல உங்களை வரைய
விரும்புகிறேன். நீங்கள் வேட்டைக்குச்
செல்லும் போதெல்லாம் என்னையும் உடன்
அழைத்துச் செல்லுங்கள். உங்கள் உருவத்தை என்
உள்ளத்தில் பதிய வைத்துக்
கொள்கிறேன். அதன் பிறகு ஓவியம் வரைந்து
தருகிறேன்!''
என்றான்.
அதற்கு அரசரும் ஒப்புக் கொண்டார். வேட்டையாட
அவர் காட்டிற்குள் செல்லும் போதெல்லாம்
அவனையும் உடன் அழைத்துச் சென்றார்.
இரண்டு மாதங்கள் சென்றன. ஓவியனைப் பார்த்து
அவர்,
""இன்னுமா
நீ என்னை ஓவியம் வரையவில்லை!''
என்று கேட்டார்.
""அரசே!
நீங்கள் வில்லில் அம்பு பூட்டிக் குறி
வைப்பதைப்போல ஓவியம்
வரைந்துள்ளேன். சில இடங்களில் வண்ணம்
பூசவேண்டி உள்ளது. அதை இன்று
முடித்துவிடுவேன். அரண்மனைக்கு நாளை அந்த
ஓவியத்தைக் கொண்டு வருகிறேன்!''
என்றான்.
மறுநாள் சொன்னதுபோலவே ஓவியத்துடன் அரண்மனைக்கு
வந்தான் அவன். அந்த ஓவியத்தை
வாங்கிப் பார்த்தார் அரசர். அதில் அவர்
வில்லில் அம்பு பூட்டி ஒரு கண்ணை
மூடிக் கொண்டு மான் ஒன்றிற்குக் குறி
வைப்பதைப்போல அற்புதமாக வரையப்பட்டு
இருந்தது. மூடியிருந்த கண் அவருடைய குருட்டுக்
கண். திறந்திருந்த கண்
பார்வையுள்ள கண். தன் குறை தெரியாத வண்ணம்
அழகாக வரையப்பட்டிருந்த அந்த
ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்தார் அரசர்.
""ஓவியனே!
நீ எப்படி வரைந்தாலும் உனக்குத் தண்டனை தரும்
எண்ணத்தில்
இருந்தேன். ஆனால்,
நீயோ என் குறை பிறருக்குத் தெரியாத வண்ணம் மிக
அழகாக
வரைந்திருக்கிறாய். அதே சமயத்தில் நீ யாரையும்
ஏமாற்றவும் இல்லை. உன்
திறமைக்கு என் பாராட்டுக்கள். என் அன்புப்
பரிசாக விலை உயர்ந்த இந்த முத்து
மாலையையும்,
ஆயிரம் பொற்காசுகளையும் பெற்றுக்கொள்!''
என்றார் அரசர்.
பரிசைப் பெற்ற அவன்,
""அரசே!
என் மனைவியின் அறிவுரைப்படி ஓவியம் வரைந்தேன்.
தண்டனையில் இருந்து தப்பித்ததும் அல்லாமல்
பெரும் பொருளும் பரிசாக
பெற்றேன்!''
என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு வீட்டிற்கு
வந்தான்.
|