Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கதை

 

பணம் காய்க்கும் மரம் !

 

      மயில்வண்ணன் ஒரு விவசாயி. நல்ல உழைப்பாளியும் கூட. அவனுக்கு குமரன் என்று செல்ல மகன். இவனும் தன் அப்பாவுடன் அவர் வேலை செய்யும் வயல்வெளிகளுக்குச் சென்று, அவருக்கு உதவியாக வேலைகள் செய்வான். செய்யும் வேலையை மிகவும் நேர்த்தியாக செய்வான். தந்தை மயில்வண்ணனின் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? ""என் மகனிடம் ஒரு வெறும் கட்டாந்தரையை கொடுத்தால் கூட, அதனை மிக செம்மையாக உழுது பயிரிட்டு, மிக அமோகமாக விளையச் செய்துவிடுவான்!'' என்று எல்லாரிடமும் மிகப் பெருமையாக சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போவார்.

திடீரென அவரின் மனைவி இறந்துவிட சிறுவன் குமரனை வளர்ப்பதற்காக மறுமணம் செய்து கொண்டான் மயில்வண்ணன். அடுத்த வருடமே குமரனுக்கு ஒரு குட்டி தம்பி பாப்பா பிறந்துவிட்டான். குமரனுக்கு தம்பி பாப்பா மேல் உயிர். அவனை கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பான். அவனின் சின்னம்மாவிற்கு குமரனைக் கண்டால் கொஞ்சமும் பிடிப்பதே இல்லை. அந்த சிறுவனை பாடாய் படுத்துவாள். பாதி நேரம் பட்டினி போட்டு விடுவாள்.

ஆயினும் இதைப்பற்றி தன் தந்தையிடம் ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டான் அந்த சிறுவன். அவனின் கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும், திடீரென அவன் தந்தை இறந்துவிட, சின்னம்மாவின் கொடுமை தாங்க முடியவில்லை. அவனை பட்டினி போட்டுவிட்டு எல்லா வேலைகளையும் செய்ய சொல்லுவாள். சிறுவனுக்கு வேறு போக்கிடம் இல்லாததால் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு, தன் தந்தை விட்டுச் சென்ற நிலத்தை உழுது, செம்மைப்படுத்துவதிலேயே காலத்தை ஓட்டி வந்தான்.

ஒருநாள் அவனின் சின்னம்மா அவனை கூப்பிட்டு, ""ஏலேய்! உன்னையும் வெச்சு சோறு போடற அளவு உன் அப்பா சொத்து வைத்துவிட்டு போகலை. அதனால், இருக்குற சொத்தை மூணு பங்காக பிரிச்சுட தீர்மானிச்சுட்டேன். எனக்கும், என் மகனுக்கும் இப்போ இங்கே இருக்கிற நிலமே போதும். உனக்குத் தனியா அந்த குன்றின் மேலுள்ள நிலத்தை ஒதுக்கிட்டேன். நீ உடனே இந்த இடத்தை காலி பண்ணிடணும்!'' என்றாள் சிறிதும் மனசாட்சியே இல்லாமல்.

அவன் தன் நிலமையை யாரிடம் போய் முறையிட முடியும்? மறுவார்த்தை பேசாமல் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அந்த குன்றின் மீது இருந்த வறண்ட கட்டாந்தரைக்கு போனான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு ஒன்றுதான். மறுநாளே தன் தந்தையின் ஆசியுடன் அந்த வறண்ட இடத்தை இரவு பகல் பாராமல் வெட்டி சமப்படுத்த ஆரம்பித்தான். அவனின் இந்த அயராத உழைப்பிற்கு கூலியாக அந்த நிலத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ஊற்றுகள்.

கடுமையான வறண்ட பூமியில் தண்ணீர் ஊற்று என்றால் அது எத்தனை பெரிய அதிர்ஷ்டம். இப்போது பயரிட விதைகள் வேண்டுமே? விதைகள் வாங்க பணத்திற்கு எங்கே போவான்? சின்னம்மாவை அணுகினால், அடியும், உதையும், அவமானமும்தான் கிட்டும். யோசித்து யோசித்து மிகவும் குழம்பியவன், கடைசியில் மிகவும் தயக்கத்துடன் தன் தந்தையின் நண்பர் ஒருவரை அணுகினான்.

அந்த நல்ல உள்ளம் படைத்த நண்பர், ""மகனே! கவலைப்படாதே. எல்லா விபரங்களும் கேள்விப்பட்டேன். நானே நேரில் வந்து உன்னைச் சந்தித்து என் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து, என் பிள்ளைகளுடன் பிள்ளையாய் உன்னையும் சேர்த்து வளர்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்குள் நீயே வந்து விட்டாய். தயங்காமல் பயப்படாமல் உனக்கு என்ன உதவி வேண்டுமோ கேள். நான் முழுமனதுடன் உனக்கு உதவத் தயார்!'' என்றார்.

அவன் விபரத்தை கூறியதும், விதை நெல்லையும் மற்றும் செலவிற்கு பணமும் கொடுத்தார். ""ஐயா! இதையெல்லாம் நான் கடனாக பெற்றுக் கொள்கிறேன். என் நிலத்தில் விளச்சலை கண்டதும், அதனை விற்று உங்களின் கடனை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்!'' என்றான் குமரன்.
""
மகனே! உன் நேர்மையை நான் மிகவும் மெச்சுகிறேன். இதனை உனக்கு நான் கடனாக கொடுக்கவில்லை. இது என் அன்பளிப்பு. என் மனமார்ந்த ஆசியுடன் கொடுக்கிறேன். மேலும், உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்!'' என்று வாழ்த்தி அனுப்பினார்.

குமரனின் உழைப்பு வீண்போகவே இல்லை. அவன் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு விளைச்சல். அபரிதமான லாபமும் கூட. தன் அயராது உழைப்பின் பயனால் கிடைத்த லாபத்தில் ஒரு சிறிய வீட்டை கட்டிக் கொண்டான். ஏர் உழ மாடுகளும், சந்தைக்கு சாமான்களை ஏற்றிச் செல்ல ஒரு வண்டியும், இரண்டு காளை மாடுகளையும் வாங்கிக் கொண்டான். வாழ்க்கை ஒரே சீராக அமைதியாக மனநிறைவோடு செல்ல ஆரம்பித்தது.
உழைப்பு என்றால் என்பதையே அறியாத அவனின் சின்னம்மாவும், தம்பியும் கையிலிருக்கும் பணத்தில் உட்கார்ந்து தின்று காலத்தை கழித்தனர்.
அதன் விளைவு? நிலத்தில் விளைச்சல் முற்றிலுமாக குறைந்து போய், கையிலிருக்கும் பணமும் கரைந்து கொண்டே போயிற்று.

திடீரென அந்த சின்னம்மாவிற்கு ஞானோதயம் ஏற்பட்டது. தன் மகனிடம், ""ஏண்டா ராஜா! நாம நல்ல விளைச்சல் நிலத்தை நமக்கு வெச்சுட்டு, வெறும் கட்டாந்தரையைத்தானே அந்த துப்புக் கெட்ட பயனுக்கு கொடுத்தோம். அப்படியிருக்க, அவன் இப்போ வீடு கட்டி விட்டான். வாரம் தவறாமே சந்தைக்கு ஏராளமாக காய்கறிகளும், வண்டி வண்டியா நெல்லும் கொண்டு வந்து விற்று மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக்கிறான். இது எப்படிடா சாத்தியம்?

""
உன் அப்பா நமக்குத் தெரியாமே அவனுக்கு நிறைய பணம் கொடுத்துட்டு போயிருக்கிறார். இத்தனை காலமும் அதை ஒளிச்சுவெச்சுட்டு இப்போ மெள்ள மெள்ள எடுத்து செலவழிக்கிறான். நீ நைசா மதியம் அவன் வீட்டிற்குப் போய் உன் அப்பா அவனுக்கு கொடுத்திருக்கும் திருட்டு பணத்தின் விபரத்தை தெரிச்சுட்டு வா!'' என்றாள்.

மதியம் அண்ணன் வீட்டிற்குச் சென்றான். அண்ணன் வேறு எந்த வித காழ்ப்புணர்ச்சியும் இன்றி அவனை வரவேற்று உபசரித்தான். ""அண்ணா! உண்மையைச் சொல். உன்னிடம் மாத்திரம் எப்படி இத்தனை பணம் குவிந்திருக்கிறது. எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு அப்பா உனக்கு எத்தனை லட்சம் கொடுத்தார். நானும், அம்மாவும் சாப்பாட்டிற்கே இல்லாமல் திண்டாடுகிறோம்!'' என்றான்.

""
தம்பி! உண்மையை சொல்லு என்கிறாய். சொல்லட்டுமா... அப்பா எனக்கு ஒரு பணம் காய்க்கும் மரத்தை விட்டு சென்றிருக்கிறார். அதிலிருந்துதான் நான் இத்தனை பணத்தை பறித்துக் கொள்கிறேன்!''

அதிர்ந்தான் சிறியவன், ""என்னது பணம் காய்க்கும் மரமா? அது எப்படி இருக்கும்?'' என்றான்.

""
தம்பி! அது மிகவும் வலிமையான அடிமரம். இதிலிருந்து மிகவும் உறுதியான இரண்டு கிளைகள். அக்கிளைகளின் நுனியில் அந்த இரண்டு கிளைகளையும் விடவும் மிகவும் அழுத்தமான பத்து கிளைகள்...'' அவன் வார்த்தைகளை முடிக்கும்முன் தன் வீட்டிற்கு விரைந்தான் சிறியவன்.
""
அம்மா! நீ சொன்னது சரிதான். அப்பா ஒரு துரோகி. நமக்குத் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு பணம் காய்க்கும் மரத்தை விட்டுச் சென்றிருக்கிறாராம்!'' என்றான்.

சின்னம்மாவின் ரத்தம் கொதித்தது. ""கவலைப்படாதேடா கண்ணா! இன்று இரவே போய் அந்த மரத்தை வேரோடு வெட்டிக் கொண்டு வந்து நம் நிலத்தில் நட்டு விடலாம்!'' என்றாள்.

அம்மாவும் மகனும் அன்று இரவே அண்ணனின் தோட்டத்தில் புகுந்து, ஒரு பெரிய மரத்தை வெட்டி எடுத்து வந்து தங்கள் தோட்டத்தில் பதித்துவிட்டனர். அவர்களின் மனமெல்லாம் ஒரே நிம்மதி. இனி பணப்பிரச்னை இருக்காது அல்லவா? காலை, மாலை இருவேளையும் தவறாமல் போய் அம்மரம், பணம் பறித்துக் கொள்ளும் நிலை வந்து விட்டதா என்று ஆவலுடன் பார்ப்பர்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தனவே தவிர அம்மரம் பணம் காய்க்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. மரம் அப்படியே காய்ந்துபோய் இலைகள் அனைத்தும் வாட ஆரம்பித்துவிட்டது. பணம் கொட்டும் என்று எண்ணினோமே... அதற்கு பதில் வாடிய இலைகள் அல்லவா உதிர்ந்து கொட்டுகின்றன என்று புலம்பிதவித்த அந்த பேராசைக்கார சின்னம்மா உடனே மகனிடம், ""பாருடா உன் அண்ணன் உன் அப்பாவைவிட மிகவும் ஏமாற்றுப் பேர்வழி. இல்லையென்றால் அவனுக்கு மட்டும் பணத்தை கொட்டும் இம்மரம் நம்மை இப்படியா ஏமாற்றும்? போ அவனை சும்மாவிடக்கூடாது,'' என்றாள்.
மிக கோபாவேசமாக தன் வீட்டினுள் நுழைந்த தன் தம்பியை சிரிப்புடன் வரவேற்றான் அண்ணன்.

""
சிரிக்காதே! மரியாதையாக அந்த பணம் காய்க்கும் மரத்தை என்னிடம் ஒப்படைத்துவிடு. இல்லையெனில் உன்னை உயிரோடு விடமாட்டேன்!'' என்று கத்தினான்.

""
தம்பி! பேராசை உன் கண்களை மறைக்கிறது. நான் குறிப்பிட்ட அந்த மரம் எது தெரியுமா? இதோ பார். அம்மரத்தின் வலுவான இரண்டு கிளைகள்; இதோ என் இரண்டு கால்கள். அதன் நுனியில் இருக்கும் பத்து கிளைகள்தாம் என் பத்து விரல்கள். உன் தோட்டத்தில் நன்றாக கால்களை ஊன்றி இந்த பத்து விரல்களாலும் ஏர் பிடித்து பூமியை நன்றாக உழுது பயிரிடு. இந்த உழைப்பின் பலன் உன் தோட்டத்தின் மரங்களில் பணம் பூத்து குலுங்கும்!'' என்றான்.

""
அண்ணா! என்னை மன்னித்து விடு. உன் அறிவுரைப்படியே செய்கிறேன்!'' என்று சொல்லி விடைபெற்றான் தம்பி. ***

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved