|

பூதம் காத்த புதையல்
பரமார்த்த குருவும் சீடர்களும் படுத்துத்
தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
தூக்கத்தில்,
"ஆகா!
தங்கம்! வெள்ளி! வைடூரியம்!" என்று உளறிக்
கொண்டு இருந்தார்,
பரமார்த்தர்.
திடுக்கிட்டு எழுந்த சீடர்கள்,
குரு உளறுவதைக் கண்டு அவரை தட்டி
எழுப்பினார்கள்.
தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட
பரமார்த்தர்,
"புத்தி
கெட்டவர்களே!
ஏன் என்னை எழுப்பினீர்கள்?
அற்புதமான கனவு ஒன்று கண்டு கொண்டு இருந்தேன்.
கெடுத்து விட்டீர்களே!" என்று சீடர்களைத்
திட்டினார்.
உடனே எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு கனவா?
என்ன கனவு கண்டீர்கள்?"
என்று கேட்டார்கள்.
பரமார்த்தர்,
சிறிது நினைவுபடுத்தி,
"புதையல்!
புதையல்!" என்று கத்தினார்.
"புதையலா?
எங்கே?
எங்கே?"
என்று குதித்தார்கள்,
சீடர்கள்.
பிறகு,
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,
"சீடர்களே,
இந்த அறையின்
பின்னால் உள்ள தோட்டம் தான் என் கனவில்
வந்தது. தோட்டத்தின் சனி மூலையில்
ஒரு பானை நிறைய பொன்னும் வெள்ளியுமாய்க்
கிடக்கிறது!" என்று மெல்ல
கூறினார்.
"அடேயப்பா!
பானை நிறைய தங்கமா?"
என்று மகிழ்ச்சியால் கீழே விழுந்து புரண்டான்
மட்டி.
"குருவே!
இந்தப் புதையலை வைத்துக் கொண்டு நாம் என்ன
செய்வது?"
என்று கேட்டான் மூடன்.
அதற்குள் முட்டாள்,
"நம்
குருவுக்குப் பெரிய குதிரையாக,
அழகான குதிரையாக வாங்கலாமே!" என்று பதில்
சொன்னான்.
"நாம்
கூட ஆளுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொள்ளலாம்!"
என்று மகிழ்ந்தான் மட்டி.
"குருவே!
இந்த இடம் சரியில்லை. இதை இடித்து விட்டு
ராஜாவுக்குப் போட்டியாக அரண்மனை கட்ட
வேண்டும்!" என்று யோசனை சொன்னான் மூடன்.
"இனிமேல்
நமக்குக் கவலையே இருக்காது. தினமும் வடையும்
பாயாசமுமாகச் சாப்பிடலாம்!" என்று குதித்தான்,
மடையன்.
"குருவே!
அப்படியானால் நாம் எல்லோரும் இப்போதே
ஓடிப்போய் அந்த இடத்தைத் தோண்டிப்பார்ப்போம்"
என்றான் முட்டாள்.
"ஆமாம்!
அதுதான் நல்லது. பகலில் தோண்டினால் ஊர்
பூராவும் தெரிந்து விடும். அப்புறம் எல்லோரும்
பங்கு கேட்பார்களே!" என்றான் மடையன்.
"மடையன்
சொல்வதும் சரிதான். வாருங்கள்,
எல்லோரும் போய் இப்போதே தோண்டுவோம்!" என்று
தோட்டத்துக்குப் போனார்கள்.
வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக்
கட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றான்,
முட்டாள்.
யாராவது பார்க்கிறார்களா?
என்று பார்த்து விட்டு,
தம்முடைய கைத்தடியால்
ஓர் இடத்தில் வட்டமாகக் கோடு போட்டார்,
பரமார்த்தர். உடனே மட்டியும்
மடையனும் வேகம் வேகமாக அந்த இடத்தைக் கையால் பரக் பரக் என்று தோண்ட
ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரம் ஆனதும்,
"கை
எல்லாம் வலிக்கிறதே!" என்று மூச்சு வாங்க
உட்கார்ந்து விட்டனர்.
"குருவே!
புதையலை விடக்கூடாது!" என்றபடி மூடனும்,
மண்டுவும் தொடர்ந்து பள்ளம் பறித்தார்கள்.
நான்கு பேரும் மாறி மாறி தோண்டிக் கொண்டே
இருந்தபோது,
திடீரென்று வெள்ளையாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.
"ஆ!
புதையல்! புதையல்!" என்று குதித்தபடி இன்னும்
வேகமாகத் தோண்டினான்,
மட்டி.
உடனே பரமார்த்தர் குழிக்குள் கையை விட்டுப்
பார்த்தார். உருண்டையாக ஏதோ ஒன்று கிடைத்தது.
எல்லோரும் ஆசையோடு அதை வெளிச்சத்தில் காட்டிப்
பார்த்தார்கள்.
பரமார்த்தரின் கையில் இருந்தது ஒரு மண்டை ஓடு!
அவ்வளவுதான்! "ஐயோ! ஐயோ!" என்று அலறியபடி
ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தடித்து ஓடினார்கள்
|