Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கதை

     பாபுவின் தன்னம்பிக்கை

 


சிறுவயது முதலே பாபு, படு சுட்டிப் பையனாக இருந்தான். அவன் அப்பா ஒரு தமிழாசிரியர். வீட்டிற்கு ஒரே பிள்ளை பாபு. அதுவும் செல்லப் பிள்ளை. அப்பாவோடுதான், அவரது வாகனத்தில் பள்ளிக்குச் செல்வான். ஏனென்றால், அப்பா வேலை செய்யும் பள்ளிக்கூடத்தில்தான் அவனும் படித்தான். ஒரு நாள் பாபு தன் அப்பாவிடம் ஒரு சைக்கிள் வேண்டுமென்று கேட்டான்.

""
உனக்கு எதற்கு இப்போது சைக்கிள். நான்தான் என் வண்டியில் உன்னை பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பவும் அழைத்து வருகிறேனே! சைக்கிள் இருந்தாலும் உனக்கு அதை ஓட்டத் தெரியாதே! போய் படிக்கிற வேலையைப் பார்'' என்றார் அப்பா.

பாபு சொன்னான்: ""நானே சைக்கிள் ஓட்டப் பழகிக்குவேன் அப்பா. என்னோட நண்பர்கள் எல்லோருமே சைக்கிள் வைத்திருக்கிறார்கள் அப்பா.''

""
வேண்டாம், வேண்டாம்! சைக்கிளைப் போட்டுக்கொண்டு எங்காவது விழுந்துவிடுவாய். உடலில் காயம்பட்டுவிடும். பக்கத்து வீட்டுப் பையன் ராகுலைப் பார்த்தாயா, அவன் உன்னைவிடப் பெரியவன். அவன் சைக்கிள் ஓட்டப் பழகுவதற்கே பல மாதங்கள் ஆயின. அதுவும் ஆள் வைத்துதான் அவன் கற்றுக்கொண்டான். நீ மேல் வகுப்பிற்குப் போன பிறகு சைக்கிள் வாங்குவதைப் பற்றி யோசிக்கலாம். இப்போது வேண்டாம். உன்னால் ஓட்ட முடியாது. நீ சின்னப் பையன்.''அப்பா மறுத்தார்.

இதையெல்லாம் சமையல் அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பாபுவின்

அம்மா, ""பாபு, அப்பா சொல்வதைக்

கேள்!'' என்றார்கள். பாபு வருத்தமடைந்தான். ""போம்மா, நான் நன்றாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வேன். நான் ஒன்றும் சின்னப் பையன் இல்லை. ஏழாம் வகுப்புப் படிக்கிறேன்'' என்றான். பிறகு, அவன் உள்ளே சென்று ஒரு பத்திரிகையை எடுத்து வந்து, அதில் வெளியாகியிருந்த சைக்கிள் விளம்பரத்தைக் காட்டிக் கேட்டான்:

""
இந்த சைக்கிள்தான் அம்மா எனக்கு வேண்டும். பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்!''

அப்பா அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு,""இந்த சைக்கிள் மிகவும் உயரமாக இருக்கிறதே, உன் உயரத்திற்கு பெடல் எட்டாதுபோலிருக்கிறதே!'' என்றார். பாபு எதுவும் பேசவில்லை. சோர்ந்த முகத்துடன் படுக்கச் சென்றுவிட்டான். மகனின் ஆசையை நிராகரிப்பதற்கு அப்பாவுக்கு முடியவில்லை. பாபு மிகவும் ஆசைப்பட்டுக் கேட்கிறானே என்று அடுத்த நாளே அந்த சைக்கிளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.

சைக்கிளைப் பார்த்ததும் பாபுவால் தன் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. அப்பாவுக்கு நன்றி சொன்னான். அவனது மகிழ்ச்சியைப் பார்த்து அப்பா புன்னகைத்தார். அம்மா,சற்றே பதற்றத்துடன் ""சைக்கிள் ஓட்டப் பழகுறேன்னு எங்காவது விழுந்துடாதேப்பா!'' என்றார்கள். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் தன் வீட்டைவிட்டு சற்றுத் தொலைவு சென்று சைக்கிளில் ஏற முயற்சித்தான். "தொப்'பென்று கீழே விழுந்தான். அந்த வழியாக வந்துகொண்டிருந்த ராகுல், பாபுவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துச் சொன்னான்: ""ஓட்டத் தெரியாத உனக்கு எதுக்குடா இந்த சைக்கிள்? வீண் வேலை பார்க்காதே!''

பாபு கோபத்துடன் பதில் சொன்னான்: ""நான் உன்னைப்போன்றவன் அல்ல. நீ ஆள் வைத்துதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டாய். நான் எவர் உதவியுமின்றி என் சொந்த முயற்சியிலேயே கற்றுக்கொள்வேன்.''

""
போடா பொடிப்பயலே! உன்னால அது முடியாதுடா!'' என்று ராகுல் அலட்சியமாகக் கூறினான்.

பாபு தினமும் சைக்கிள் ஓட்டப் பழகினான். சைக்கிளுடன் விழுந்ததால் அவன் உடலில் தினமும் காயங்களும், சிராய்ப்புகளும் ஏற்பட்டன. அவன் அம்மா அந்தக் காயங்களுக்கு மருந்து தடவினார்கள். ""இனி சைக்கிளை எடுக்காதே'' என்று கண்டித்தும் பார்த்தார்கள். அப்பாவும் இவனுக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தது தவறுதானோ என்று யோசிக்கத் தொடங்கினார். பெரிதாக ஏதும் அடி பட்டுவிட்டால் என்ன செய்வது என்று அவருக்குக் கவலை.

நாட்கள் சென்றன. தன் முயற்சியைக் கைவிடவில்லை பாபு. எத்தனை முறை விழுந்தாலும், மீண்டும் மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்தான். சைக்கிள் ஓட்டி விழுவதால் ஏற்படும் காயங்கள் குறையத் தொடங்கின. கடைசியில் அந்த நாள் வந்தது.

அன்று, அலட்சியமாக சைக்கிள் ஓட்டி வந்த பாபு, தன் வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு கம்பீரமாக உள்ளே சென்றான். பாபு, சர்வ சாதாரணமாக சைக்கிள் ஓட்டி வந்ததைப் பார்த்த அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அளவற்ற மகிழ்ச்சி!

அதற்கடுத்த மாதம் அந்த ஊரில் நடந்த சைக்கிள் போட்டியில் முதல் பரிசை வென்றது பாபுதான் என்று சொன்னால் வியப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. பாபுவைக் கேலி செய்த ராகுல் தோற்றுவிட்டான். தான் கேலி செய்ததற்காக அவன் பாபுவிடம் மன்னிப்புக் கேட்டான். அவனது தவறைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தன் நண்பனாக ஏற்றுக்கொண்டான் பாபு.


இளம் படைப்பாளி:
-
வெ. சுஸ்மிதா, ஒன்பதாம் வகுப்பு "இ' பிரிவு


 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved