|

அவசரக்காரனுக்கு புத்திமட்டு!
காட்டுப்புதூர்
என்ற ஊரில் தோட்டக்காரர் ஒருவர் இருந்தார்.
அவர் வீட்டின் பின்புறம்
எக்கச்சக்கமான காய்கறிச் செடிகளை பயிரிட்டு
வந்தார். வெண்டை,
கத்தரி,
முட்டைக்கோஸ்,
கேரட்,
முள்ளங்கி என்று ஏராளமான காய்கறிகளை பயிரிட்டு
இருந்தார். அந்த தோட்டத்தில் ஒரு முயல்
அலைந்தது.
தினமும்
இரவிலும்,
பகலிலும் வந்து காய்கறிகளை தின்ன ஆரம்பித்தது.
இதனால்
தோட்டக்காரர் நிறைய சங்கடப்பட்டார். தன்
தோட்டம் முழுவதும் அந்த குட்டி
முயலால் நாசப்படுவதாக எல்லாரிடமும் கூறி
வருத்தப்பட்டார். எவ்வளவோ
முயன்றும் அவரால் அந்த முயலை பிடிக்க
முடியவில்லை. பிறகு வனத்துறையினரிடம்
அவர் புகார் கொடுக்க வேண்டும் என்று உறுதி
செய்தார். அதன்படி உடனே
புறப்பட்டார். முயலின் தொல்லையை பற்றி புகார்
கொடுத்துவிட்டு அழுதார்.
""ஒரு
முயலுக்காக நீங்கள் இத்தனை தூரம் சிரமப்படுவது
கூடாது. இனி அந்த முயலை
விரட்டுவது எங்கள் பொறுப்பு கவலையை விடுங்கள்.
நாளை வந்து அந்த முயலை
பிடித்து விடுகிறோம்,''
என்றார் வனத்துறை அதிகாரி. சொன்னபடியே...
வனத்துறை
அதிகாரி மறுநாள் காலையில் தோட்டக்காரர்
வீட்டிற்கு சென்றார். தோட்டக்காரர்
வீட்டிற்கு வனத்துறை அதிகாரி செல்லும் போது
தனியாய் செல்ல முடியுமா?
அவரோடு
பத்து பதினைந்து வேலைக்காரர்களும் உடன்
சென்றனர். அனைவரும் முயலை பிடிக்க
கம்பி வலைகளையும்,
கம்புகளையும் தூக்கிக் கொண்டு சென்றனர்.
தோட்டக்காரர்
அனைவரையும் வரவேற்றார். அனைவருக்கும் நல்ல
மோர் கரைத்துக் கொடுத்தார்.
பின்பு
வனத்துறை அதிகாரி தோட்டத்திற்குள் சென்று
பார்த்தார். ஒரு சிறிய
புதருக்குப் பின்னால் அந்த குட்டி முயல்
அமர்ந்திருந்தது. முட்டைக்கோசின்
இலைகளை தின்று கொண்டிருந்தது. வனத்துறை
அதிகாரி அதனை பிடிக்க முயன்றார்.
அது ஒரே தாவாக தாவியது. வேலிக்கு அருகில்
சென்று ஒளிந்து கொண்டது. அதைக்
கண்ட வனத்துறை அதிகாரியும்,
அவரது வேலைக்காரர்களும் அங்குமிங்கும் ஓடினர்.
கம்பால் நிலத்தில் தட்டி முயலை பயமுறுத்தினர்.
பயங்கர கூச்சலுடன்
குறுக்கும் நெடுக்குமாய் பாய்ந்தனர். ஆனால்,
முயல் அவர்கள் கையில்
மாட்டாமல் தப்பிவிட்டது. சோர்ந்து போன
வனத்துறை அதிகாரியும் அவர்
வேலைக்காரர்களும் பெருமூச்சுடன் திரும்பினர்.
அப்போதுதான் அவர்கள்
கண்ணில் தோட்டக்காரன் நிலத்தில் விளைந்து
இருந்த முட்டைக்கோசும்,
கேரட்டும்
பட்டன. மறு நொடியில் அவர்கள் ஆவலுடன் கைக்கு
கிடைத்த காய்கறிகளை
ஆளுக்கொன்றாக பறித்துக் கொண்டனர். வனத்துறை
அதிகாரியின் செயலை தோட்டக்காரர்
தடுக்க முடியுமா?
எனவே,
அவர் அமைதியாக இருந்தார்.
சிறிது நேரத்தில்
அவர்கள் எல்லாரும் சென்று விட்டனர்.
தோட்டக்காரர் சுற்றும் முற்றும்
பார்த்தார். அவனது தோட்டம் வனத்துறை
அதிகாரியும்,
அவரது வேலைக்காரர்களும்
ஓடியாடியதில் மிதிபட்டு நாசமாகி இருந்தது.
மிஞ்சியிருந்த ஒரு சில
காய்கறிகளையும் அவர்களே பறித்து கொண்டு
போயினர். தோட்டக்காரர் தன்
முட்டாள்தனத்தை எண்ணினார். ஆயிரம் முயல்கள்
ஒன்றாய் வந்து தன் தோட்டத்தில்
காய்கறிகளை தின்றால் கூட இத்தனை நாசம்
ஏற்பட்டிராது என்று அவருக்கு
புரிந்தது. சாதாரண சின்ன விஷயத்தை பெரிது
செய்ததால் தனக்கு ஏற்பட்ட
நஷ்டத்தை எண்ணினார். தலைக்குனிந்தார். கண்ணீர்
விட்டபடி அங்கிருந்து
சென்றார்.
|