|
கந்தப்பு
மாஸ்ரர், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை
சேர்த்தவர். அவர் கற்பித்த பாடசாலையிலே ஓய்வு
நிலைபெறும் வரை சேவையாற்றியதோடு பாடசாலை
வளர்ச்சியிலும் கல்வி மேம்பாட்டுக்கும் முன்
நின்று உழைத்தவர்.
நான்கு பிள்ளைகளையும் பெற்றுக் கொடுத்து
விட்டு அவர் மனைவி காமாட்சி கண்ணை
மூடிக்கொண்டார்.
நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி
படிப்பித்து நிமிர்த்தும் வரையும், படாத பாடு
பட்டவர். ஒரு ஆண் பிள்ளையையும் ஒரு பெண்
பிள்ளையையும் வைத்தியக் கலாநிதியாகவும் மற்றைய
ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும்
பொறியலாளர்களாகவும் இந்த உலகுக்கு தந்ததோடு,
ஆசிரியர் தொழிலுக்கும் ஓய்வு நிலைபெறும்
வயதையும் அடைந்து விட்டார்.
நாட்டில் இனப்போர் கொழுந்து விட்டு எரிந்து
கொண்டிருக்கும் காலம். அவர் பிள்ளைகள்
மேற்படிப்பை காரணம் காட்டி அவுஸ்திரேலியா கனடா
லண்டன் என்று புலம்பெயர்ந்து அங்கேயே
நிரந்தரமாக வாழத் தலைப்பட்டுக் கொண்டனர்.
ஆசிரியர் தொழிலின் ஓய்வூதியமும் பிள்ளைகள்
அனுப்பும் சிறு தொகையிலும் சொந்த ஊரோடு
காலத்தைக் கழித்து வந்தார்.
சும்மா வந்து பார்த்து விட்டுப்போகலாம் என்று
அழைத்த மூத்த மகனின் அழைப்பை ஏற்று
அவுஸ்திரேலியா போனவர் அங்கேயே தங்கி கொண்டார்.
பழைய வீட்டை விற்காமல், புதிய வீடு ஒன்று கட்ட
ஆரம்பித்து, பழையதை திருத்தி வாடகைக்கு
விட்டுப் பார்க்க ஆள் தேவைக்கு பாவித்து, ஒரு
காவல்காரனாக இருக்க வேண்டி சிலகாலம் தங்கக்
காரணமாகியது.
இப்படியே மெல்ல மெல்ல மாலை நேரம் நடந்து பழகி,
பாணுக்கும் பாலுக்கும் கடைதெருவுக்கு போய் வர,
மருமகள் கேட்கிறாவே என்று செய்யப்போய் அதுவே
காலப்போக்கில் கடமையாகி, இனி பேரப்பிள்ளைகள்
பிறந்து, அவர்களை தலாட்டி பராமரித்து, என்று
ஒவ்வொரு கட்டம் கட்டமாக, காலமும் கரைந்தது.
பேரப்பிள்ளைகளும் வளர்ந்து அவர்களும் ஆளாகிப்
போக, கந்தப்பு மாஸ்ரின் உடலும் தளர்ந்து
வயதும் நிறைந்து, அவரைப் பார்க்கவே சகிக்காத
ஜடமாக உலா வர, பிள்ளைகளும் பேரப்பிளைகளும்
அவர் மீது வெறுப்புக் காட்டத் தொடங்கினார்கள.
ஊருக்கும் போக முடியாமலும், விட்டில்
சந்தோசமாக வாழ முடியாமலும் ஒரு திரிசங்கு
நிலையில் இருந்தது அவரது வாழ்க்கை.
பிறந்தநாள் பாட்டி விழா என்று வரும் மாஸ்ரிடம்
படித்த மாணவர்களும் அவர் மீது வெறுப்பை
காட்டத் தொடங்கியதை அவரால் தாங்கமுடியவில்லை.
ஒரு நாள் கந்தப்புமாஸ்ரர் தன் காலபோன போக்கில்
போகத் தொடங்கினார். அன்று வெப்பமும் காற்றும்
படு மோசமாக வீசியது.
மாஸ்ரருக்கு தண்ணீர் தாகமும் பசியும் வாட்டத்
தொடங்கியது. பாதை ஓரமாக இருக்கும் கடைகளில்
தண்ணீர் கேட்டார். யாருமே அவருக்கு தண்ணீர்
கொடுக்கவில்லை.
அவருடைய சட்டைப் பையினுள் கையை வைத்துப்
பார்த்தார். இரண்டு வெள்ளிகள் இருந்தது. அதை
எடுத்து பக்கத்தில் உள்ள கடையில் இரண்டு
வெள்ளிகளை கொடுத்து தண்ணீர் தரும்படி
கெஞ்சிக்கேட்டார்.
கடைக்காரரோ இரண்டு வெள்ளிகள் பத்துக்காசுகள்
தந்தால், தண்ணீர் தருவேன் என்று சொன்னதோடு,
கழுத்தைப்பிடித்து, தள்ளாத குறையாக வெளியே
போகும்படி சொன்னார்.
பத்துக்காசுகள் இல்லாததால் தண்ணீர் வேண்ட
முடியவில்லையே என்ற கவலையுடன், வெளியே வந்தவர்
எதிரே இருக்கும் அதிஸ்ரலாபச் சீட்டிழுப்பு
கடையைக் கண்டார்.
இரண்டு வெள்ளிகளையும் உள்ளங்கையில் வைத்துக்
கொண்டு எதையோ யோசித்தவர்
"இந்த இரண்டு வெள்ளிகளுக்கு ஏதாவது சீட்டுத்
தரமுடியுமா…" என்று கேட்டார் மாஸ்ரர்.
கடைக்காரர் இரண்டு வெள்ளிகளுக்கான சீட்டைக்
கொடுக்க அதை வேண்டியவர் உள்ளே நின்றே
சுரண்டிப் பார்த்தார்.
என்ன ஆச்சரியம் மூன்று ஒரே மாதிரியே வடிவம்
இருக்க அதை அப்படியே கடைக்காரரிடம் காட்ட
அதைச் சரிபார்த்த கடைக்காரரோ வாயை பிளந்து
கொண்டு...
"உங்களுக்கு பத்து ஆயிரம் வெள்ளிகள்
கிடைத்திருக்கிறது" என்றார்.
இதைக் கேட்ட
மற்றைய கடைக்காரர்களும் ஓடி வந்து
சரிபார்த்ததோடு, உங்களுக்கு என்ன வேண்டும்
என்று கேட்டுக் கேட்டு கொடுத்தனர். அவர்களுடைய
அன்பிலும் அரவணைப்பிலும் திணறிப் போனார்
கந்தப்பு மாஸ்ரர்.
Home |